திவிட்டன் அவ்வரிமாவைப் பிளந்து கொல்லுதல்

725. அழிந்த கோளரிக் குருதிய தடுங்கடங் களிற்றோ
டொழிந்த வெண்மருப் புடைந்தவு மொளிமுத்த மணியும்
பொழிந்து கல்லறைப் பொலிவது குலிகச்சே றலம்பி
யிழிந்த கங்கையி னருவியொத் திழிந்தவவ் விடத்தே.

     (இ - ள்.) அழிந்த கோளரி - திவிட்டனால் கொல்லப்பட்ட அச்சிங்கத்தினுடைய,
குருதி - செந்நீர், அது அரும் கடம் களிற்றோடு ஒழிந்த வெண்மருப்பு - அவ்வரிமா
முன்னர்க் கொன்ற யானைகளின் வெள்ளிய கோடுகள் உடலைவிட்டு வேறா ஒளிந்து
கிடந்ததனவும், உடைந்தவும் - அக்கோடுகள் உடைந்தனவும், ஒளிமுத்தமணியும் - உடைந்த
அக்கோட்டினின்றும் சிதறி ஒளியுடன் கிடந்த முத்தாகிய மணிகளும் ஆகியவற்றை வரன்றிக்
கொண்டு, பொழிந்து கல்லறைப் பொலிவது - ஒழுகி அக்கற்பாறைக்கண் விளங்குவது;
குலிகச்சேறலம்பி இழிந்த கங்கையின் அருவியொத்து - சாதிலிங்கக் குழம்பை அளையிஇப்
பாயும் கங்கையாற்றின்
அருவியைப்போல, அவ்விடத்தே இழிந்தது-அம்மலைச்சாரலில் ஓடிற்று,(எ-று.)

     அவ்வரிமாவின் குருதி, ஆண்டுக்கிடந்த ஆனைவெண்கோடு முதலியவற்றை
அளைந்து சாதிலிங்கக் குழம்பை அலம்பிப் பெருகிய கங்கையின் அருவி ஒத்து ஒழுகியது.
கோளரிக்குருதி பொலிவது அவ்விடத்தே கங்கை அருவியை ஒத்து இழிந்ததென்க.
 

( 153 )