(இ - ள்.) வளை வண்ணன் - விசயன், தம்பி ஆற்றல் கண்டு - திவிட்டனுடைய பேராற்றலைக் கண்கூடாகக் கண்டு, உவந்து தன்மனம் தளிர்த்து - மகிழ்ச்சிகொண்டு தன் உளந்தழைத்து, ஒளியால் வம்பு கொண்டவன்போனின்று - அம் மெய்ப்பாடு புறம்பொசிந்து தோன்றுதலால் ஒரு புத்துருவம் படைத்தவனைப் போன்று நின்று, மொழிந்தான், - சொல்லினான், நம்பி - ஆடவர் தம்முட் சிறந்தோனே, நாம் இனி நளிவரைத் தாழ்வர் கண்டல்லால் - நாம் இனிமேல் செறிந்த மலைகளின் தாழ்வரை வழியாகச் சென்றாலல்லது, குருதியது இழிவு - இச்செந்நீரின் வெள்ளம் ஓடுதல், இம்பர்போம்படித்தன்று - இவ்வழியாகச் செல்லும் தன்மைத்தன்று, (எ - று.) விசயன் மிக்க மகிழ்ச்சியுடையனாய் நம்பீ! இவ்வழியெல்லாம் அவ்வரிமாவின் குருதி யாறாக ஓடுதலால் யாம் இவ்வழியே போதல் சாலாது ஆதலின் இம் மலைச்சாரலின் வழியே செல்வோம் என்றான் என்க. இதுமுதல் 40 செய்யுள்கள் ஒருதொடர் திவிட்டநம்பிக்கு விசயன் குறிஞ்சிநில வனப்பினை எடுத்துக் கூறல் |