(இ - ள்.) தா இல் சீர் தாமரை தகு குணச்செல்வன் - குற்றமற்ற பெரும்புகழ் படைத்த, தாமரை என்னும் எண்ணளவு உயர்ந்த தகுதியுடைய குணங்களையே செல்வமாக வுடையோனே, தாம் மரை தடத்திடை - தாவுகின்ற மான்கள் மிக்க இந்நிலத்தின்கண்ணே, சாரல்வாய் தாமரைமலர்ந்த - சார்பிடங்களிலே தாமரைகள் மலர்ந்துள்ளன, துளையொடு, - மாதுளை மரங்களோடே, மறலி - குங்கும மரங்களும், சண்பகம் தாம் - சண்பக மரங்களும், அரைதடித்து - அடிப்பகுதி பருத்து, அலர் ததைந்து - மலர்கள் செறிந்து, தோன்றும் - தோன்றா நிற்கும், (எ - று.) தாமரை - ஓரெண். செல்வன் - அண்மை விளி. மறலி - குங்குமமரம் துளை - மாதுளை, (தலைக்குறை) இந் நிலத்தேயும் மருதநிலத்திற்குரிய தாமரைத் தடங்கள் திகழ்கின்றன; சண்பகம் குங்குமம் முதலிய மரங்களும் பருத்து வளமுடையனவாய்த் திகழ்கின்றன; என்றபடி. |