(இ -ள்.) நாகம் - யானைகள், சந்தனத் தழைகொண்டு - சந்தன மரத்தின் தழைகளை ஒடித்துக்கொண்டு, நளிர்வண்டு ஓச்சும் - தம்மேல் மொய்த்துச் செறியும் அளிகளை ஓட்டும், நாகம் - சுரபுன்னைமரங்கள், சந்தனப் பொதும்பிடை - சந்தன மரச்சோலையின் ஊடே, நளிர்ந்து - செறிந்து, தாது - மகரந்தப்பொடிகளை, உமிழ்வ - உதிர்க்கும், நாகம் - பாம்புகள், செஞ்சுடர் - ஞாயிற்றை, நகும் - ஒவ்வாய் என நகைக்கும்மணி - மணியை, உமிழ்ந்து இருள் கடிவ - கான்று இருளை அகற்றும், நாகம் மற்றிது - இம்மலை, நாகர்தம் உலகினை நகும் - தேவருலகத்தை என்னை ஒவ்வாய் எனச் சிரிக்கும் என்பதாம், (எ - று.) முதல் அடியில் நாகம் - யானை; இரண்டாமடியில் நாகம் - சுரபுன்னை மரம்; மூன்றாமடியில் நாகம் - பாம்பு; நாலாமடியில் நாகம் - மலை. |