விசயனுடைய உடல், கண், குஞ்சி, காது | 75. | காமரு வலம்புரி கமழு மேனியன் தாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன் தூமரு ளிருடுணர்ந் தனைய குஞ்சியன் பூமரு 1பொலங்குழை புரளுங் காதினன். | (இ - ள்.) காமரு வலம்புரி கமழும் மேனியன் - அழகிய வலம்புரிச் சங்கைப்போன்ற உடலையுடையவன்; தாமரை - தாமரை மலரின்; அக இதழ் தடுத்த - உள்ளிதழை ஒப்பாகாமையினால் தடுத்துவிட்ட; கண்ணினன் - கண்களையுடையவன்; தூ மருள் இருள துணர்ந்த அனைய குஞ்சியன் - கலப்பற்றதும் மருளுதற்கு ஏதுவாகியதும் ஆகிய இருள்கொத்தாகத் திரண்டது போலும் தலைமயிரை உடையவன்; பூமரு பொலம்குழை - பூத்தொழில் செய்யப்பெற்ற பொற் குண்டலங்கள்; புரளும் காதினன் - அசைகின்ற காதுகளையுடையவன். (எ - று.) விசயன் எவ்வாறிருப்பான் என்பதை இச் செய்யுளில் கூறுகிறார். வலம்புரிச் சங்கைப் போன்ற வெள்ளிய உடலையுடையவன்; தாமரையின் அகவிதழைப் போன்ற கண்; இருள் திரண்டாற்போன்ற குஞ்சியையுடையவன்; தூ - தூய. தூய இருள் என்றது, ஒளிக் கலப்பற்றுச் செறிந்த இருள் என்றவாறு. நல்ல இருள் என்பது உலக வழக்கு. அழகிய குண்டலங்கள் அசைகின்ற காதுகளையுடையவன். வலம்புரி - வலப்பக்கமாகச் சுழிந்துள்ள சங்கு. அகவிதழ் அழகிலும் மென்மையிலும் சிறந்ததாகலின் உவமைக்கு அதனையெடுத்தார். அகவிதழ் தடுத்த - அகவிதழின் தன்மை முழுவதையும் புறத்தே செல்லவிடாது தடுத்துத் தன்னிடத்தே அடக்கிக்கொண்ட. தூம் மருள் - என்பதனை தூமம் என்பதன் இடைக் குறையாகக்கொண்டு புகையை ஒத்த இருள் என்று பொருள் கூறுவாரும் உளர். அங்ஙனம் கூறுதல் உவமைக் குவமையாயிருக்கும். | ( 6 ) | | |
|
|