(இ - ள்.) தயங்குகின்றன தான மந்தாரம் - திகழாநின்ற வானவருலகத்து மந்தார மரமாகிய தேவதருவோ எனில், இயங்குகின்னரர் இன்புறுநீரவே - அத் தருநிழலிலே இயங்கும் இயல்புடைய கின்னரதேவர்கள் மட்டும் இன்புறுதற் குரியனவாம், தானம் - இவ்விடத்துள்ள, மந்தாரம் - இம் மந்தார மரங்கள், பயங்கொள்வார் பயங்கொள்வ அனைத்தையும் - தம் பால் பயன் கொள்ளுதற்குரியார் எல்லாருக்கும் அவர் பயன் நுகர்தற்குரியவற்றை யெல்லாம், தயங்குகின்றன, தம்பால் உடையனவாய்த் திகழாநின்றன, (எ - று.) தானம் - வானுலகம்; இடம். வானவருலகத்தே உள்ள மந்தார மரங்கள் ஆண்டுள்ள கின்னரர்க்குமட்டுமே இன்பந்தருவன, இங்குள்ள மந்தாரம் வரையாது வள்ளல்போன்று எல்லோர்க்கும் இன்ப மளிப்பனவாம் என்க. |