மாலை, மார்பு, கை, நிறம், தோள், நடை ஆகியன

76. வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன்
1தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
கோடுயர் குன்றெனக் 2குலவு தோளினன்
பீடுடை நடையினன் பெரிய நம்பியே.

     (இ - ள்.) வாடல் இல் கண்ணியன் - வாடுதல் இல்லாத மாலையை அணிந்தவன்;
மலர்ந்த மார்பினன் - விரிந்த மார்பையுடையவன்; தாள் தவழ் தடக்கையன் - முழங்கால்
அளவும் நீண்டு விளங்கும் பெரிய கையை உடையவன்; தயங்கு சோதியன் - விளங்குகின்ற
உடல் ஒளியை உடையவன்; கோடுஉயர் குன்று என - உயர்ந்த உச்சியினையுடைய குன்று
போல; குலவு தோளினன் - விளங்குகின்ற தோள்களையுடையவன்; பீடு உடை நடையினன்
- சிங்கவேற்றின் பெருமித நடையைப்போலும் நடையை உடையவன்; பெரிய நம்பி -
பெரியவனான விசயன். (எ - று.)

     இச் செய்யுளும் விசயனைப்பற்றியே கூறுகின்றது. வாடலில் கண்ணியன் என்றமையின்
விசயனுடைய தெய்வத்தன்மை விளங்குகின்றது. கைகள் நீண்டிருத்தல் ஆடவர்கட்கு
நல்லியல்பாகும். தோளுக்குக் குன்று உவமை. நம்பி - ஆடவரிற் சிறந்தவன்; குவவுத்
தோளினன் என்னும் பாடத்திற்குப் பருத்த தோள்களையுடையவன் என்று பொருள்
கொள்க.

( 7 )