(இ - ள்.) வாங்கு நீர் வண்ண கேளாய்! - வளைந்த கடல்போன்ற நீல வண்ணனே! கேட்பாயாக, ஆங்கு நீ முனிந்த போழ்தின் - அவ்விடத்தே நீ சினந்து ஆரவாரம் செய்தபொழுது, அரியது அகல நோக்கி - அச்சிங்கம் அஞ்சி ஓடியதைக் கண்டபொழுது, மாயமா மதித்து நின்றேன் - மாயம் என எண்ணி நின்றேன், ஒலிபுனல் உதிர யாறு - முழக்கத்தையுடைய நீர்போன்ற குருதியாறு, வீங்கி வந்து இழிந்தபோழ்து - பெருகி வந்து பாய்தலைக் கண்டபின்னர்த்தாள், மெய்யென வியப்புச் சென்றேன் - உண்மையே என்றுணர்ந்து வியப்புற்றேன், (எ - று.) நம்பீ! நீ ஆரவாரித்தபோது ஓடிய அரிமாவைக் கண்டு இஃதொரு மாயம் போலும் என்று எண்ணியிருந்தேன். ஓசையுடனே குருதியாறு பாயக் கண்ட பின்னரே உண்மை என்றுணர்ந்து வியந்தேன் என்றான் என்க. |