772.

குன்றிற்கு மருங்கு வாழுங் குழூஉக்களிற் றினங்க ளெல்லா
மன்றைக்கன் றலறக் கொன்றுண் டகலிடம் பிளப்பச் சீறி
வென்றிக்கண் விருப்பு நீங்கா வெங்கண்மா விதனைக் கொன்றா
1யின்றைக்கொண் டுலக மெல்லா மினிதுகண் படுக்கு மன்றே

      (இ - ள்.) குன்றிற்கு மருங்குவாழும் - மலைச்சாரலிலே வாழுகின்ற, குழுஉக்
களிற்று இனங்கள் எல்லாம் - கூட்டமாக வாழுமியல்புடைய யானைகளையெல்லாம் -
அன்றைக்கு அன்று - நாடோறும், அலறக்கொன்று உண்டு - அலறும்படி கொன்று தின்று,
அகலிடம் பிளப்பச் சீறி - அகன்ற உலகம் பிளந்து போம்படி சீறுதலைச் செய்து,
வென்றிக்கண் விருப்புநீங்கா - வெல்லுதற் றொழிலில் ஆசை ஒழியாத, வெங்கண்மா இதனை
- வெவ்விய கண்ணையுடைய இவ் வரிமாவை, கொன்றாய் - நீ கொன்றொழித்தாய், உலகம்
எல்லாம் - இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும், இன்றைக் கொண்டு இனிது
கண்படுக்கும் அன்றே - இன்று தொடங்கி அச்சம் தவிர்ந்து இனிதாக உறங்குவனவாம்,
(எ - று.)

     குன்றிடத்தே வாழும் யானைக் கூட்டங்களை நாடோறும் அலறக்கொன்று தின்று
கொடுமையே செய்த இவ் வரிமாவை நீ கொன்றாய், இன்று தொடங்கி உலகம் அச்சமற்
றின்புற்றுறங்கும் என்றான், என்க.

( 200 )