இறவாது நிற்போர் இவர் எனல்

775.

மன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு 3மாயி
லன்னவ னாண்மை யாவ தலிபெற்ற 4வழகு போலா
மென்னையான் கொடுத்தும் வையத் திடுக்கணோய் கெடுப்ப னென்னும்
நின்னையே போலு நீரார் நிலமிசை நிலவி நின்றார்.

      (இ - ள்.) மன்னுயிர் வருத்தம் கண்டும் - பிறவுயிர்கள் இன்னல் எய்துதைக்
கண்கூடாகக் கண்டுவைத்தும், வாழ்வதே வலிக்குமாயின் - அவ்வருத்தம் போக்க
நினையாமல் தன் வாழ்க்கையைப் பேணுவதையே உறுதியாகக் கொள்வான் ஒருவன்
உளனாயின், அன்னவன் ஆண்மையாவது - அப்படிப்பட்டவன் பெற்றுள்ள ஆண்மைத்
தன்மை, அலிபெற்ற அழகு போலாம் - பேடி பெற்றுள்ள அழகை ஒப்பதாம், “என்னை
யான் கொடுத்தும் - என்னுடைய ஆருயிரையும் கொடுத்து, வையத்து இடுக்கண் நோய்
கெடுப்பன் என்னும் - உலகில் இடையூற்றால் நிகழும் துன்பத்தைப் போக்குவல்“ என்னும்
மேற்கோளையுடைய, நின்னையேபோலும் நீரார் - உன்னை ஒத்த தன்மையுடையார்தாம்,
நிலமிசை நிலவி நின்றார் - இவ்வுலகத்தின்கண் இறவாது நிலைத்து நிற்கின்ற பெரியோர்,
(எ - று.)

     இறவாது நிலைத்துநிற்றல் - புகழுடம்பான் அழிவின்றி நிற்றல்.

     அங்ஙனம் நிலைத்து நிற்றலைச் சிபி முதலியோரிடத்துக் காண்க. பிறவுயிர்
துன்புறுங்கால் எமக்கென்னென் றிருப்போர் ஆண்மை பேடியின் அழகை ஒக்கும்.
நின்போல், உயிர்கொடுத்தும் பிறர்இடுக்கண் போக்குவல் என்னும் மேற்கோளுடையோரே
இவ்வுலகில் புகழ் வடிவில் நின்று நிலைப்பவர் ஆவர் என்றபடி

( 203 )