(இ - ள்.) ஈங்கு - இப்பாலைக்காட்டில், வெங்கதிரோன் எறிப்ப - வெவ்விய ஞாயிறு காய்தலாலே, நிழல்வேம் கொல் என்று ஒளித்திட்டு - நிழல் நாம் வெந்தொழிவேம் கொல் என்று அஞ்சி ஒளிப்பவும், இபம் வீழ்ந்து - யானைகள் நீர் பெறாது வீழ்ந்துயங்கவும், சேர் பாங்கு அலார்மனைபோல - அயலார் விரும்பிச் சேர்தற்குரிய பண்பிலாத மாக்கள்தம் இல்லங்களைப்போல, பறைந்து - அழிந்து, ஓமை - ஓமையென்னும் மரங்கள் மட்டும், நின்று உலவுற்றன - நிலைத்து நின்று வற்றின, (எ - று.) அப்பாலைக் காட்டின்கண் இனியிருப்பில் யாம் வெந்தொழிவேம் என்று அஞ்சி நிழல்கள் ஓடிஒளித்தன. யானைகள் வெப்பம் பொறாது விழுந்து புரள்வன, ஓமைகள்மட்டும் தம்பால் வந்தார்க்கு உதவாத புல்லியர் இல்லம்போல் ஒதுங்கும் நிழலின்றி வற்றி உலர்ந்து நின்றன என்க. |