இது முதல், 14 செய்யுள்கள் ஒரு தொடர். (இ - ள்.) புது நாண் மலர் - புதுவதாய் அன்றலர்ந்த மலர்கள், விண்டு பொழிந்து இழியும் - வாய்நெகிழ்ந்து பொழிதலாலே ஒழுகுகின்ற, மதுநாறு புனல் - தேன்கமழும் நீர்மிக்க, மருதத்தினை - அம்மருத நிலத்தின்கண் உள்ள வளங்களை, இது காண் என - இதனைக் காண்பாயாகவென்று திவிட்டனைக்காட்டி, இன்னன சொல்லினனே - இவை இவை கூறினன், (அவன் யாரெனில்) விதுமாண்மிகு சோதி - திங்கள் மண்டிலத்தின் மாட்சிமை மிக்க ஒளியை ஒத்து, விளங்கு ஒளியான் - திகழ்தலையுடைய வண்ணத் தானாய விசயன், (எ - று.) நாள் மலர் பொழியும் தேன் மணம் கமழ்கின்ற நீர் மிக்க மருதம் எய்தியவுடன் விசயன் அதன் வளத்தைத் திவிட்டனுக்குக் காட்டிக் கூறுவான் ஆயினன் என்க. இனி வருவன மருதநில வளம் என்க. |