நங்கையர் மனதில் விசயன்

82. வார்வளை வண்ணனென் மனத்து ளான்பிறர்
ஏர்வளர் நெடுங்கணுக் கிலக்க மல்லனாற்
கார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய்
ஆர்வளர்த் தவர்கொலென் பவரு மாயினார்.
 
     (இ - ள்.) வார்வளை வண்ணன் - நீரில் தோன்றுகின்ற சங்கைப்போலும் வெள்ளிய
நிறமுடையவனான விசயன்; என் மனத்து உளான் - என்னுடைய உள்ளத்தின் கண்ணே
இருக்கின்றான்; பிறர் - மற்றவர்களது; ஏர்வளர் நெடும் கணுக்கு இலக்கம் அல்லன் -
அழகு பொருந்திய நீண்ட கண்கட்கு அவன் காணப்பெற மாட்டான்; அவ்வாறாகவும்;
கார்வளர் கொம்பு அனார் இவர்கள் - கார்காலத்தே வளராநின்ற கொழுவிய பூங்கொடியை
ஒத்த இம்மகளிருடைய; காமநோய் - அவாநோயை ஆர் வளர்த்தவர் என்பவரும்
ஆயினார் - யார் மிகுதிப்படுத்தியவர்கள் என்று கேட்பவர்களும் சிலர் உளராயினார்.
(எ - று.)

     இது விசயனைக் கண்டு மயங்கினா ளொருத்தி கூற்றென்க.
இவள் பேதைமை:-

          ... ... ... “நெஞ்சிடை வஞ்சன் வந்து
          புக்கனன் போகாவண்ணம் கண்ணெனும் புலங்கொள்வாயில்
          சிக்கென அடைத்தேன் தோழி“ (கம்ப. உலா. 14)

என்று கூறிய மிதிலை நகரத்தாள் பேதைமையைப் போன்றது.
வளைவண்ணன் - விசயன். வார் - நீர்.
 

 (13)