திவிட்டன் அரிமாவைக் கொன்ற செய்தியை
ஒற்றனாலறிந்த சடிமன்னன் மகிழ்தல்

828.

உற்றவான் குழவித் திங்க ளொளிமுழை யகட்டுப் போந்து
முற்றுவான் முளைத்த போலு மெயிறுடை மூரிச் சிங்கம்
மற்றம்மா லழித்த தெல்லாம் வானமா றாகச் 1சென்ற
ஒற்றனா லுணர்ந்து வேந்த னுவகையங் கடலு ளாழ்ந்தான்.

      (இ - ள்.) வான்உற்ற குழவித்திங்கள் - விசும்பிற்பொருந்திய பிறைத்திங்கள், முழை
அகட்டுப்போந்து - குகையின் வயிற்றுள் புகுந்து, ஒளிமுற்றுவான் - ஒளிமுதிரும் பொருட்டு,
முளைத்தபோலும் - இரண்டுருவாக முளைத்ததைப் போன்ற, எயிறு உடைமூரிச் சிங்கம் -
பற்களையுடைய பெரிய சிங்கத்தை, மற்று அம்மால் அழித்தது எல்லாம் - அத்திவிட்டன்
கொன்ற வரலாற்றை எல்லாம், வானம் ஆறாகச் சென்ற - விசும்பு வழியாகப் போன,
ஒற்றனால் உணர்ந்து - தன் ஒற்றன் ஒருவனால் அறிந்து கொண்டு, வேந்தன் - சடிமன்னன்,
உவகையங்கடலுள் ஆழ்ந்தான் - இன்பக்கடலுள் மூழ்கினான், (எ - று.)

     சடிமன்னனால் ஏவப்பெற்ற ஒற்றன் திவிட்டநம்பி அரிமாவைப் பிளந்து கொன்ற
செய்தியை அறிந்து வந்து சடிமன்னனுக்குக் கூறச் சடி மிகவும் மகிழ்ந்தான் என்க.

( 2 )