சடிமன்னன் தன்மகள் சுயம்பிரபையைத்
திவிட்டனுக்கு மணஞ்செய்விக்கத் தொடங்குதல்
829.

கரியவாய் விலங்கி நீண்டு களிக்கய லிரண்டு தம்முட்
2பொரியபோ கின்ற போலும் பொங்கரித் தடங்கட் பேதைக்
குரியமா லவற்குச் சென்று கொடுப்பனென் றுலகங் காக்கும்
பெரியவன் றமரோ டெண்ணிக் கடிவினை பெருக்க லுற்றான்.

      (இ - ள்.) களியவாய் விலங்கி நீண்டு - கரிய நிறமுடையனவாய் விலகி நீளியவாய்,
களிக்கயல் இரண்டு தம்முள் - களிப்புடைய இரண்டு கயல்மீன்கள் தம்முள் எதிர்ந்து,
பொரிய - போர்செய்தற்கு, போகின்ற போலும் - செல்வதை நிகர்த்த, பொங்கு அரி தடம்
கண் பேதைக்கு - மிக்க செவ்வரிபடர்ந்த அகன்ற கண்களையுடைய சுயம்பிரபையை, உரிய
மாலவற்குச் சென்று கொடுப்பன் என்று - மணம்புணர்தற்கு உரியவனான திவிட்டனுக்கு
அழைத்துக் கொடுபோய் மணம் செய்யக் கொடுத்திடுவேன் என்று, உலகம் காக்கும்
பெரியவன் - உலகத்தைக் காவல்செய்யும் பெருமையுடைய சடிவேந்தன், தமரோடு எண்ணி
- தன் அமைச்சரோடு ஆராய்ந்து தெளிந்து, கடிவினை - மணவினைக்குரிய செயல்களை,
பெருக்கலுற்றான் - செய்யத் தொடங்கினான், (எ - று.)

     பொரிய - பொர; போர்செய்ய. அரி - வரி. பேதை - சுயம்பிரபை. பெரியவன் - சடி.
தமர் - அமைச்சர் முதலியோர். கடிவினை - திருமணச் செயல்.

( 3 )