சடிமன்னன், பிரீதி வருத்தனன் முதலிய எண்மரையும்
அழைத்துத் தன் அரசியலை ஒப்புவித்தல்
1. பிரீதிவர்த்தனன்

830.

கிளரொளி மாடக் கோயிற் கின்னரர் கெழுவ லோவா
வளரொளி வயங்கு தோன்றல் 1வருத்தமா னத்து மன்னன்
உளரொளி யுமிழும் பூணான் 2பிரீதிவர்த் தனனென் றோதும்
தளிரொளி தயங்கு மேனித் தாமரைச் செங்க ணானே.
 

      (இது தொடங்கி எட்டுச் செய்யுள் ஒருதொடர்) குளகம்.

     (இ - ள்.) இளர்ஒளி மாடக்கோயில் - ஒளிவீசும் மாடங்களையுடைய தன்
அரண்மனையின்கண், கின்னரர் கெழுவல் ஓவா - கின்னரர்கள் வந்து நெருங்குதலை
ஒழியாத, வளர் ஒளி வயங்கு தோன்றல் - வளர்கின்ற புகழாலே திகழ்தலுடைய பெரியோன்,
வருத்தமானத்து மன்னன் - வருத்த மானம் என்னும் நாட்டினை ஆளும் அரசனும்,
உளரொளி உமிழும் பூணான் - சலித்தற்றன்மையுடைய ஒளிவீசும்
அணிகலன்களையுடையவனும், பிரீதிவர்த்தனன் என்று ஓதும் - பிரீதிவருத்தனன் என்று
புகழ்ந்து கூறப்படுபவனும், தளிர் ஒளி தயங்குமேனி - தளிர்போன்ற ஒளிதிகழும்
திருமேனியை உடையவனும், தாமரைச் செங்கணானும் - செந்தாமரைபோலச் சிவந்த
கண்களையுடையவனும்.

    ஒளிமேனியையும், செங்கண்ணையும், பூணையும், கின்னரர் கெழுவ லொழியாத
கோயிலையும், உடைய வருத்தமானத்து மன்னனாகிய பிரீதி வருத்தனனும், என்க.

( 4 )