8. சித்திரதரன்

837.

ஓங்குநீர்ப் புரிசை வேலி யொண்டுறைக் குவளை வேய்ந்த
தூங்குநீ ருடுத்த பாங்கிற் 1சோபன முடைய தோன்றல்
தேங்குநீர்க் கடலந் தானைந் சித்திர தரனிவ் வையம்
தாங்குநீ ரொளியோ டொன்றித் தண்ணளி தயங்க நின்றான்.

      (இ - ள்.) ஓங்கும் நீர்ப்புரிசை வேலி-மிக்க நீரையுடைய அகழியையும்
மதில்களையும் வேலியாகவுடையதும், ஒண்துறை - ஒள்ளிய துறைகளை யுடைத்தாய்,
குவளை வேய்ந்த - குவளை மலர்கள் மூடப்பெற்ற, தூங்குநீர் உடுத்த - நிலையுற்ற நீர்
சூழ்ந்த, பாங்கில் - பக்க நிலங்களையுடையதும் ஆகிய, சோபனம் உடைய தோன்றல் - சோபனம் என்னும் நகரத்தையுடைய அரசனும், இவ்வையம் தாங்கும்நீர் - இவ்வுலகம்
முழுதையும் ஓம்புகின்ற தன்மையுடையதோர், ஒளியோடு ஒன்றி - புகழொடு பொருந்தி,
தண்ணளி தயங்க - குளிர்ந்த அருளுடைமைதிகழ, நின்றான் - நிலைத்து நின்றவனும்,
தேங்குநீர்க் கடலந்தானை - நீர்மிக்குத் தேங்கிய கடல்போலும் பெருக்க முடைய
படைகளையுடையவனும் ஆகிய, சித்திரதரன் - சித்திரதரன் என்பானும், (எ - று.)

     சோபன நகரத்து மன்னனும், தண்ணளியோனும், கடலந்தானையை யுடையயோனும் ஆகிய சித்திரதரனும், என்க.

( 11 )