களிறு பண்ணுறுத்தல்

839.

வெண்ணிலாக் குழவித் திங்கண் மேகத்துப் பதித்த போலும்
ஒண்ணிலா வுருவக் கோட்ட வோடைமால் களிற்றின் மேலோர்
பண்ணெலா மணிந்து தோன்றப் பருமித்துக் கருவி யேற்றிக்
கண்ணிலாம் பதாகை சேர்த்திக் காழகில் கழும விட்டார்.

     (இ - ள்.) வெண்ணிலாக் குழவித்திங்கள் - வெள்ளிய நிலாவொளி வீசும் இளம்
பிறையை, மேகத்துப் பதித்தபோலும் - முகிலின்கட் பதித்துவைத்ததைப் போன்ற, ஒண்ணிலா
உருவக் கோட்ட - ஒள்ளிய நிலவொளி வீசும் அழகிய கோடுகளையுடைய, ஓடைமால்
களிற்றின் - முகபடாம் அணிந்த பெரிய யானைகளின், மேலோர் - எருத்தத்தின் மேல்
இருந்து நடத்தும் பாகர்கள், பண் எலாம் அணிந்து தோன்றப் பருமித்து - பண்பாடுகள்
அனைத்தும் அழகுற்றுத் தோன்றுமாறு யானைகளை ஒப்பனை செய்து, கருவியேற்றி -
யானைமேலிருந்து போர்செய்தற்குரிய கருவிகளையும் அங்குசம் கோடரி முதலிய
நடத்தும்கருவிகளையும் அவற்றின் மிசை ஏற்றி, கண்நிலாம் பதாகையேற்றி, காண்பார்
கண்களைத் தம்பாலே நிலவச்செய்யும் அழகுடைய கொடிகளையும் மேலேசேர்த்து, காழ்அகில் கழும விட்டார் - நிறம்
அமைந்த அகிற்புகை சூழப் புகைத்தனர், (எ - று.)

     அகில் புகைத்தல் கண்ணேறு கழித்தற் கென்க. பண் - ஒப்பனை. கோட்ட -
கோட்டை உடைய. பருமித்து - ஒப்பனை செய்து. காழகில் - வைரமுடைய அகிற் புகை.
கருவி - தோட்டி முதலியன. இது யானை பண்ணுறுத்தியது கூறிற்று.

( 13 )