(இ - ள்.) சேனை பண் அமைத்துச் சென்று - இங்ஙனம் படை ஒப்பனை செய்யப்பட்டுப்போய், திருக்கடை செறிந்த போழ்தில் - அரண்மனை வாயிலிற் கூடியவுடனே, மாண்பின் தாரவர் - மாட்சிமையுடைய மாலையணிந்தவரும், தானையுள்படுநர் - படையுள் இருந்து தொழில் செய்வோரும் ஆகிய தூதுவர்கள், தொழுதுகூற - சடியரசனை வணங்கிச் சொல்ல, வேல்நவில் தடக்கை வேந்தன் - வேற்படையை ஏந்திய பெரிய கையையுடைய சடியரசன், விண் இயல் விமானம் ஒன்று - விசும்பில் இயங்கும் இயல் புடையதொரு விமானத்தை, வானவில் உமிழ்ந்து மின்ன - வானவில்லைப்போன்று பல்வேறு ஒளிகளையும் பரப்பி மின்னும்படி, மனத்தினால் நிருமித்திட்டான் - மனத்தினால் நினைத்த மாத்திரையானே படைத்தான், (எ - று.) வானவில் உமிழ்ந்து மின்ன - இந்திர வில்லைப்போல் பல்வேறு ஒளிகளை வீசி மின்ன என்க. சடியரசன் விஞ்சையனாகலின் நினைப்பி னாலேயே விமானத்தைத் தோற்றுவித்தான் என்க. தான் கருதிய வண்ணம் எனினுமாம். |