சுயம்பிரபை விமானம் ஏறுதல்
866.

அன்னவகை 1தேவியர்க ளோடமரு மெல்லை
முன்னுமுக வோரையொடு மூர்த்தநல நோக்கி
மன்னுபுல வோர்கள்சொல மன்னன்மக டன்னை
இன்னகை விமானதல மேறுகினி தென்றான்.

      (இ - ள்.) அன்னவகை - அவ்வாறு, தேவியர்களோடு அமரும் எல்லை -
சுயம்பிரபை தாயர்களோடு வீற்றிருந்த பொழுது, மன்னுபுல வோர்கள் - சோதிடநூலில்
நிலைபெற்ற அறிவுடையோர்கள், முகவோரை யொடு மூர்த்தநலம் நோக்கி -
முதன்மையுடைய ஓரை (இராசி) முழுத்தம் இவற்றின் நலன்களை ஆராய்ந்தறிந்து, சொல -
சொல்லுதலாலே, மன்னன் - சடி வேந்தன், மகள்தன்னை - தன் மகளாகிய சுயம்பிரபையை,
இன்னகை விமான தலம் ஏறுகினிது என்றான் - இன்புறத்திகழும் எழிலுடைய விமானத்தில்
இனிதே ஏறுக என்று பணித்தான், (எ - று.)

     அவ்வாறு ஒப்பனை செய்யப்பட்டுச் சுயம்பிரபை தாயரோடே வைகிய பொழுது
புலவர்கள் ஓரை முழுத்த முதலிய நாள்நன்மை நோக்கிச் சொல்ல, சடிமன்னன் மகளை,
விமானத்தில் இனிதே ஏறுக என்றான், என்க.

( 40 )