வழியிலுள்ள காட்சிகளை அமிர்தபிரபை
சுயம்பிரபைக்குக் கூறுதல்
கங்கைப் பேரியாறு
876.

நங்கை காணிது நம்மலைக் கும்பரப் பொன்மலைப் புடை 3வீழுங்
கங்கை யாறிதன் கரையன கற்பகக் காவுக ளிவைகண்டா
யிங்கு நாமிரு விசும்பிடை யியங்கலிற் சிறிய வொத் துளவேனு
மங்க ணார்க்குநம் முலகினை யளப்பவொத் துளவவை யறியுங்கால்

     இதுமுதல் 13 செய்யுள்கள் ஒருதொடர்
     (இ - ள்.) நங்கை காண் - சுயம்பிரபாய்! காணுதி!, இது - (இப்பேரியாற்றை),
இவ்வியாறு, நம்மலைக்கு உம்பர் - நமது இமயமலைக்கு அப்பால் உயர்ந்துள்ள,
அப்பொன்மலைப்புடை வீழும் - அந்தப் பொன்மலைப் பகுதியிற்றோன்றி ஒழுகும்,
கங்கையாறு - கங்கை கங்கை என்றுலகினர் ஏத்தும் யாறாகும், இதன் கரையன -
இக்கங்கையாற்றின் கரையிடத்தே உள்ளனவாகிய இவை - இச்சோலைகள், கற்பகக் காவுகள்
கண்டாய் - கற்பகச் சோலைகள் என அறிவாய், இங்கு நாம் இருவிசும்பிடை இயங்கலில் -
இவ்விடத்தே யாம் பெரிய விசும்பின்கண் செல்கின்றோ மாகலின், (இறப்பச்சேய்மைக்
கண்ணுள்ள நம் கண்கட்கு), சிறிய ஒத்துளவேனும் - இச்சோலைகள் சிறியனபோலத்
தோன்றுகின்றனவாயினும், அங்கணார்க்கு - அவற்றின் அண்மையிடத்துள்ளார்க்கு,
அறியுங்கால் - அறியப்புகின், அவை - அச்சோலைகள், நம் உலகினை அளப்ப வொத்துள
- நமது உலகத்தை முழுதும் தம் விரிவுடைமையால் அளப்பனபோலும் பெரியவைகள்
ஆகும், (எ - று.)

     சுயம்பிரபாய்! இங்குத் தோன்றும், யாறு கங்கையாறாம். அதன் கரையிடத்துள்ள
சோலைகள், கற்பகச் சோலைகள். சேய்மையிடத்திருந்து காணும் நமக்கு இவை சிறியவாகத்
தோன்றுகின்றனவேனும், அண்மையிலுள்ளார்க்கு அவை சாலப் பெரியனவாதல் காணப்படும்
என்றாள், என்க.

( 50 )