இதுவுமது
879.

உயருஞ் சந்தனப் பொழிலலைத் தொளிர்மணிக்
     1கலங்களை யுமிழ்ந்திட்டுப்
பெயருந் தெண்டிரைப் பிறங்கலுட் பிணங்கிய
     பெருவரை யகிறேக்கி
வயிர வேதிகை மலைவது கோபுர
     வாய்தலின் படிதீண்டி
அயிரை வார்கரைக் குடகடற் றிரையொடு
     பொருதல தவியாதே.
 

      (இ - ள்.) உயரும் சந்தனப் பொழில் அலைத்து - உயர்ந்தோங்கிய
சந்தனச் சோலைகளை முறித்து, ஒளிர்மணிக் கலங்களை உமிழ்ந்திட்டு - சுடருகின்ற
மணிகளாகிய அணிகலன்களை எறிந்து, பெயரும் தெண்டிரைப் பிறங்கலுட் பிணங்கிய
பெருவரை அகில்தேக்கி - இயங்கும் தனது தெளிந்த அலைப் பெருக்கத்துள் தன்னொடு
மாறுபட்ட பெரிய மலையிடத்தனவாகிய அகில் முதலியவற்றைக் கவர்ந்து
நிறைத்துக்கொண்டு, வைர வேதிகை மலைவது - சுரமை நாட்டிலுள்ள வயிரத்தாலியன்ற
தெற்றிகளை மோதுவதாய், கோபுர வாய்தலின் படிதீண்டி - போதன நகரத்து
அரண்மனையின் கோபுர வாயிற்படியைத் தொட்டு, அயிரை வார் கரைக் குடகடல்
திரையொடு - நுண்ணிய கருமணல் பரந்த நெடிய கரையையுடைய மேற்றிசைக் கடலின்
அலைகளோடே, பொருதல தவியாதே - போர் செய்தவிதலன்றி இடையே அமைவில்லாதது,
(எ - று)

     இவ்வியாறு, சந்தனப் பொழிலலைத்து, மணிக்கலமுமிழ்ந்து, வரையகில்
தேக்கி, வேதிகை மலைந்து, கோபுர வாயிற்படி தீண்டி குடகடலில் விழும் என்றாள,் என்க.

( 53 )