881.

பேய்மை யானங்கொண் டிருந்தன்ன பெருவரை
     நெரிதரத் திரைசிந்தித்
தீமை யானைகள் செவியுகு செறிகடாந்
     திளைத்தலிற் றிசைநாறிப்
போய்மை யானங்கொண் டிழிதரும் பெருந்திசைப்
     புடையன புனல்யாறு
1சேய்மை யானமக் கொளிர்முத்தின் பருவடந்
     தெளிப்பவொத் துளபாவாய்.
 

      (இ - ள்.) பாவாய் - பாவை போன்றவளே!, பேய் மையானம் கொண்டிருந்தன்ன -
கரிய பேய்கள் நன் காட்டில் நின்றாற்போன்று நிற்கின்ற, பெருவரை - பெரிய மலைகள்,
நெரிதரத் திரை சிந்தி் - நெரிந்து போகும்படி அலைகளால் மோதி, தீமை யானைகள் -
தீயனவாகிய காட்டியானைகளின், செவியுகு - செவி முதலியவற்றில் ஊறிப் பொழிகின்ற,
செறிகடாம் - செறிந்த மதநீர், திளைத்தலில் - கலத்தலாலே, திசைநாறி - திக்குகளில் மணம்
வீசி, போய் - ஒழுகி, மையானம் கொண்டு - கரிய மரக்கலங்களைத் தன்பாற் கொண்டு பெருந் திசைப்புடையன - பெரிய திக்குளில் உளவாய, புனல்யாறு - வேறு
பல நீர் யாறுகள், சேய்மையான் - சேய்மைக்கண் கிடந்து தோன்றுவனவாகலின் அவைகள்,
நமக்கு ஒளிர்முத்தின் - சுடர்வீசும் முத்துக்களால் இயன்ற, பருவடம் - பெரிய வடங்கள்
கிடந்து தெளிப்ப ஒத்துள - விளங்குவன போன்றுள்ளன, (எ - று,)

     யானம் - மரக்கலம். பெரியவரைகளை நெரித்து யானை மதம் கமழ, மரக்கலங்களைக்
கொண்டு ஒழுகா நின்ற யாறுகள், பல சேய்மைக் கண்ணேமாகிய நமக்கு, நித்திலக்
கோவைகள் கிடந்து திகழுமாப் போலே, தோன்றுதல் காண்! என்றாள் என்க.

( 55 )