889.

சடி முதலியோர் போதன நகர்க்கண் உள்ள
     திருநிலையகத்தை எய்துதல்
இன்ன போல்வன விளையவட் குழையவ
     ளினியன பலகாட்டிப்
பன்னு மாயிடைப் பழனங்கள் வளாவிய
     படுகலி 1நெடுநீத்தம்
துன்னு நீர்வயற் சுரமியத் தகணியுட்
     சுடரணி நகர்சார்ந்து
தென்னன் றேனிமிர் திருநிலை யகமெனுஞ்
     செறிபொழி லதுசேர்ந்தார்.
 

      (இ - ள்.) இன்ன போல்வன - இவைபோன்ற காட்சிகள், இளையவட்கு -
சுயம்பிரபைக்கு, உழையவள் - தோழியாகிய அமிர்தபிரபை, இனியன பலகாட்டி - இனிய
பலவற்றைக் காட்டி; பன்னும் ஆயிடை - விளக்கும் பொழுது, பழனங்கள் வளாவிய -
வயல்கள் சூழ்ந்த, கலிபடு நெடுதீத்தம் - ஆரவாரிக்கின்ற நெடிய நீர்ப்பெருக்கு, துன்னும்
நீர் வயல் - செறிந்த நீர் வளமிக்க வயல்களையுடைய, சுரமியத்து - அகணியுள் - சுரமை
நாட்டின் அகத்தேயுள்ள, சுடர் அணி நகர் சார்ந்து - ஒளியால் அழகுற்ற போதன நகரத்தையடைந்து, தென்என் தேன் இமிர் - தென்னாதெனா எனப் பாடும் அளிகள்
இசைபாடுகின்ற, திருநிலை அகம் எனும் செறிபொழிலது - திருநிலை அகம் என்னும்
பெயரையுடைய நெருக்கமுடைய பூம்பொழிலை, சேர்ந்தார் - அடைந்தனர், (எ - று.)

     இவ்வாறு சுயம்பிரபைக்கு, அமிர்தபிரபை கூறி வருமளவில், விமானம் சுரமை
நாடடைந்து, போதனநகரின் அணித்தேயுள்ள, திருநிலையகம் என்னும் பூம்பொழிலை
எய்திற்றென்க.

( 63 )