(இ - ள்.) கன்னி மூதெயில் சூழ் கடி காவினுள் - அழிவில்லாத பழைதாகிய மதிலாற் சூழப்பட்ட மணமிக்க - அப்பூம்பொழிலின்கண், கன்னி தாதை கண் ஆர்நகர் இஞ்சியுள் - சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனுடைய இடமகன்ற அரண்மனை மதிலின் அகத்தே, கன்னிமார் பலர் காக்கும் கடையது - கன்னியராகிய காவல் மகளிர் பலரால் பாதுகாத்தலையுடைய தலைவாயிலையுடைத்தாகிய, ஓர் கன்னிமாநகர் - ஒரு கன்னிமாடம், கன்னிக்கு இயற்றினார் - சுயம்பிரபைக்கு இயற்றினார்கள், (எ - று.) கன்னிமூதெயில் என்றார் ஒருவராலும் ஒருகாலத்தும் தாக்கப்படாத பழைய திண்மதிலென்றற்கு. அம் மதிலினூடே, கன்னிக்குக் கன்னிமாடம் கண்டனர், என்க. |