வயல்களும் ஊர்களும்

9. ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன
தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை
வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி
ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே.
     (இ - ள்.) ஆங்கு - அந்நாட்டின்கண்ணுள்ள; தண்பணை - குளிர்ந்த மருதநிலங்கள்;
அவர் - அந்த மங்கையரின்; அணிநடை - அழகிய நடையினையுடைய; அன்னத்தோட்டன
- அன்னப் பறவைகளின் தொகுதி யினுடைய; தீங்குரல் மழலையால் சிலம்பும் - இனிய
குரலான நிரம்பா ஒலியால் ஆரவார முடையனவாயிருக்கும்; ஊர்கள் - அந்நாட்டிலுள்ள
ஊர்கள், வீங்கு - பருத்த; இளமுலை அவர் - முற்றாக்கொங்கைகளையுடைய மங்கையரின்;
மெல் என் சீறடி - மெல்லிய சிறிய அடிகளில் அணியப்பட்ட; ஓங்கு - உயர்ந்த; இரும்
சிலம்பினால் - பெரிய சிலம்புகளினால்; சிலம்பும் - ஆரவாரமுடையனவாயிருக்கும், (எ - று.)

     ஆங்கு : அசைநிலை. அவர் என்னுஞ்சுட்டை முற்பாட்டிலுள்ள மங்கையருக்காக்குக.

     அந்நாட்டின் வயலிடங்களெல்லாம் அன்னப்பறவைகளின் இன்னொலி
யால் சிறந்திருக்கும். ஊரிடங்களோ மங்கையர்கள் காலில் அணிந்துள்ள காற்சிலம்பின் ஒலியினால் நிறைந்திருக்கும் என்பதாம் வயலிடங்கட்கு அன்னப்பறவைகளின்
ஒலியும் ஊரிடங்கட்கு மங்கையர் காற்சிலம்பொலியும் ஒலியாகக் கூறப்பெற்றன.

( 9 )