தேர்களின் வருகை

914.

செம்பொன்செய் கிடுகு கோத்துத்
     திகிரிவாய்ப் புளகஞ் சேர்த்திப்
பைம்பொன்செய் பரவைத் தட்டிற்
     பருமணி பதித்த திண்டேர்
கம்பஞ்செய் துலக மெல்லாங்
     கைவளைக் கொள்வ போல
அம்பொன்செய் கொடிஞ்சி நெற்றி
     கொடியெடுத் தணைந்த வன்றே.

     (இ - ள்.) செம்பொன்செய் கிடுகு கோத்து - செவ்விய பொன்னால் இயன்ற
கிடுகுகளைக் கோத்து, திகிரிவாய் புளகம் சேர்த்தி - உருளைகளினிடத்தே கண்ணாடிகளால்
ஒப்பனை செய்யப்பட்டு, பைம்பொன் செய் பரவைத் தட்டில் - பசிய பொன்னாற் செய்த
அகலிதாகிய தட்டினையுடையனவும், பருமணி பதித்த -  பரிய மணிகள் பதிக்கப்பட்டனவும்
ஆகிய, திண்தேர் - உறுதியுடைய தேர்கள், உலகம் எல்லாம் கம்பம் செய்து கைவளைக்
கொள்வ போல - இப்பேருலகம் எல்லாம் அஞ்சி நடுங்குமாறு செய்து பக்கங்களிலே
வளைத்துக் கொள்ளப் போவனபோல, அம் பொன்செய் கொடிஞ்சி நெற்றி - அழகிய பொன்தாமரை மொட்டையுடைய தம் நெற்றியிடத்தே, கொடியெடுத்து அணைந்த அன்றே -
கொடிகளைத் தாங்கி வந்து எய்தின, அன்று, ஏ ; அசைகள், (எ - று.)

கிடுகு கோத்துப் புளகம் சேர்த்தி மணிபதித்த தேர்கள் உலகை வளைப்பன போலக்
கொடிஞ்சி, நெற்றிக் கொடி எடுத்து அணைந்த என்க.

( 88 )