(இ - ள்.) அரசுவாவதனோடு ஆடி இயல் அறிந்து அணைந்த பாகன் - அந்த அரச யானையோடு பெரிதும் ஊடாடி அதனுடைய இயற்கையாகிய குணங்களை நன்கு அறிந்து அதன்பால் சென்று பயின்றுள்ள அப்பாகன், புரசை நெகிழ்த்து - கழுத்திடு கயிற்றை அவிழ்த்து, மற்றோர் புதுவடம் புரள வீக்கி - வேறொரு புதியதாகிய கயிற்றைப் புரளுமாறு கட்டி, உரைசெய்தாற் சுவடு நுங்கச் செறித்து - கூறப்படுகின்ற காற்சுவட்டைக் கவ்வும்படி பிணித்து, ஒன்று புறத்ததாக்கி - ஒருகாலைத் தளையாது புறத்தே விட்டு, நிலத்தவர் ஏறுகென்றான் - தரையில் நிற்கும் யானைத் தொழிலாளர்கள் ஏறுக என்று கூறினான், (எ -று.) அத் தொழிலாளரை அதனைப் பண்ணுறுத்தற்கு ஏறுக என்றான் என்க. ஆடி - ஊடாடி. புரசை - யானைக் கழுத்திலிடும் கயிறு. நிகளம் - விலங்கு. நிலத்தவர் - பூமிமேல் நிற்கும் பாகர். |