928.

பின்னவ னேறித் தூசப்
     பெருவடம் பிடித்த பின்னைப்
பொன்னவிர் தொடர்கண் விட்டுப்
     புறத்துக்காற் புரோசை கோத்து
மன்னவ னருளு மாறு
     மங்கலக் கோலஞ் செய்வான்
துன்னருங் சுவைமுட் கோலோர்
     சூழ்ந்துவந் தணைக வென்றான்.

     (இ - ள்.) பின் அவன் ஏறி - அவர்கள் ஏறிய பின்னர்த் தான் ஏறி, தூசம்
பெருவடம் பிடித்த பின்னை - தூசம் என்னும் பெரிய கயிற்றைக் கைக்கொண்ட பின்னர்,
பொன் அவிர் தொடர்கண் விட்டு - அழகு விரிகின்ற சங்கிலிகளைத் தாழவிட்டு,
புறத்துக்கால் புரோசை கோத்து - புறங்காலில் புரோசைக் கயிற்றை மாட்டி, மன்னவன்
அருளுமாறு - பயாபதி மன்னன் மனமகிழ்ந்தருளும்படி, மங்கலக் கோலம் செய்வான் -
நன்மையாகிய ஒப்பனை செய்தற்பொருட்டு, துன்னரும் கவைமுள் கோலோர் -
நெருங்குதற்கரிய கவைத்த இரும்புமுள் தோட்டியையும் செறித்த கோலையுமுடைய பாகர்கள்,
சூழ்ந்து வந்தணைக என்றான் - அரசுவாவைச் சுற்றிவந்து பொருந்துக என்று அப்பாகன்
கூறினான், (எ - று.)

     தூசம் - கைக்கொண்டு நடத்தும் கயிறு. “வேய்முதற் றூசங் கொண்டேறினான்“ (சிந்தா
- கனக - 46) என்பதனானும் அறிக.

( 102 )