931.

பொற்றிரட் கடிகை பூட்டிப் புரிமணி யோடை சேர்த்தி
முற்றிய புளகச் சூழி முகம்புதைத் திலங்க வீழ்த்துச்
சுற்றிநின் றெரியுஞ் செம்பொற் சுடர்நிலைப் பட்டஞ் சேர்த்திக்
கற்றையங் கவரிக் கண்ணி கருணமூ லத்து வைத்தான்.

      (இ - ள்.) பொன் திரள் கடிகை பூட்டி - பொன்னாற் றிரட்டப்பட்ட கடிகை என்னும்
மாலையை அணிந்து, புரிமணியோடை சேர்த்தி - விளங்குகின்ற மணிகள் பதித்த நெற்றிப்
பட்டத்தை அணிந்து, புளகச் சூழி - கண்ணாடியாலியன்ற குழியென்னும் முகப்பட்டத்தை,
முகம் புதைத்து இலங்க வீழ்த்து - முகத்தை மூடித்திகழும்படி தூங்கவிட்டு, சுற்றி
நின்றெரியும் செம்பொன் சுடர்நிலைப் பட்டம் சேர்த்தி - யானையினது மத்தகத்தைச் சூழச்
நிலைத்து ஒளிரும் செம்பொன்னாலியன்ற சுடருடைய நிலைமைத்தாய பட்டத்தைச் சேர்த்தி, கற்றையம் கவரிக் கண்ணி - கற்றையாகக் கட்டப்பட்ட
அழகிய கவரிமானின் மயிராலாய சாமரைகளை, கருணமூலத்து வைத்தான் - செவியின்
அடியிலே செருகிவைத்தான், (எ - று.)

     கடிகை - ஒரு பொன்மாலை. ஓடை - நெற்றிப் பட்டம். புளகச் சூழி - கண்ணாடிப்
பட்டம். இஃது உச்சியிலிருந்து முகத்தே தொங்கவிடும் ஓரணி. மேலும் கடிகை பூட்டி.
ஓடைசேர்த்தி, புளகம் வீழ்த்து, பட்டம் சேர்த்தி, கருணமூலத்துக் கவரிக் கற்றை வைத்தான்
என்க.

( 105 )