அரசன் அணையில் வீற்றிருக்குங் காட்சி

95. குஞ்சரக் குழவி கவ்விக் குளிர்மதிக் கோடு போலும்
அஞ்சுட ரெயிற்ற வாளி யணிமுக மலர வூன்றிச்
செஞ்சுட ரணிபொற் சிங்கா சனமிசைச் சேர்ந்த செல்வன்
வெஞ்சுட ருதயத் துச்சி விரிந்த 4வெய் யவனோ டொத்தான்.
     (இ - ள்.) குஞ்சரம் குழவி கவ்வி - யானைக்குட்டியைத் துதிக்கையாற்
பற்றியுள்ளதும், குளிர்மதி கோடுபோலும் அம்சுடர் எயிற்ற - குளிர்ச்சியுள்ள இளம்பிறை
வடிவத்தையொத்த அழகிய ஒளியுள்ள தந்தங்களையுடையதும் ஆகிய, ஆளி - யாளியினது;
அணிமுகம் மலர ஊன்றி - அழகிய முகத்தின் வடிவமாக அமைந்த படிக்கட்டினை மிதித்து;
செம்சுடர் அணி பொன் சிங்காசனம் மிசை - சிவந்த ஒளியையுடைய அழகிய பொன்னாற்
செய்யப் பெற்ற அரியணையின்மீது; சேர்ந்த செல்வன் - ஏறியமர்ந்த பயாபதி மன்னன்;
வெம்சுடர் உதயத்து உச்சி - விரும்பத்தக்க செவ்விய ஒளியோடு கிழக்கெழு மலையின்
முடியில்; விரிந்த வெய்யவனோடு ஒத்தான் - தோன்றி விளங்குகின்ற கதிரோனைப்
போன்று காணப்பட்டான். (எ - று.)

     பயாபதி மன்னன் ஏறியமர்ந்துள்ள அரியணைக்குரியபடி யானைக் குட்டியைத்
துதிக்கையாற் பற்றியுள்ள யாளியைக் கவ்வி மிதித்து நிற்கும் ஆளி வடிவமாகச்
செய்யப்பட்டுள்ளதென்க. இஃது அத்தியாளி எனப்படும். மடங்கலணைக்குக்
கிழக்கெழுமலையும் அரசனுக்குக் கதிரவனும் உவமை. குழவி - இளமையுடையது,
“மழவுங்குழவும் இளமைப் பொருள“ என்பது சூத்திரம். யானைக்குட்டி குழவியென்னும்
பெயரைப்பெறும் என்பது, “குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை“ என்னுந்
தொல்காப்பியச் சூத்திரத்தாற் பெறப்படும்.

 ( 26 )