சடிமன்னன் விசயதிவிட்டர்களைத் தழீஇக் கோடல்

961.

காமரு கவினொளிக் காளை மார்களைத்
தாமரைச் செங்கணாற் றழுவிப் பின்னவர்
பூமரு பொன்வரை யகலம் புல்லினான்
சாமரை நன்னுதற் றடக்கை யானையான்.

     (இ - ள்.) காமரு கவின் ஒளிக்காளைமார்களை - விரும்புதற்குக் காரணமாண
அழகையும் புகழையும் உடைய காளை போன்ற விசயதிவிட்டர்களை, சாமரை நன்னுதல்
தடக்கை யானையான் - வெண்சாமரை அணிந்த நல்ல நெற்றியையுடையதும் பெரிய
துதிக்கையுடையதும் ஆகிய அரசுவாவையுடைய சடிமன்னன், தாமரைச் செங்கணால் தழுவி
- முன்னர்த் தனது தாமரை மலரை ஒத்த சிவந்த கண்களாலே அவர்களைத் தழுவுவது
போல விரும்பி நோக்கி, பின் அவர் பூமரு பொன் வரை அகலம் புல்லினான் - மீண்டும்
அவ்விசய திவிட்டர்களுடைய மலர் பொருந்திய பொன்மலையை ஒத்த மார்வங்களைத்
தழீஇக் கொண்டான், (எ - று.)

சடிமன்னன் தன்னை வணங்கிய விசயதிவிட்டர்களை மிகவும் விரும்பி நோக்கிப் பின்னர்த்
தழுவிக் கொண்டான், என்க. சாமரையால் அலங்கரிக்கப்பட்ட நல்லநுதலையுடைய யானை
என்க.

( 135 )