பயாபதி சடிமன்னன் வருகையைப் போற்றல்

970.

விண்ணிடை யிழிந்து வந்த விண்ணவர் கிழவ னொப்பாய்
மண்ணிடை யென்னை யிங்கோர் பொருளென 1மதித்து வந்த
தெண்ணிடை யுணரு மாந்தர்க் கிடைதெரி வரிய தொன்றாற்
கண்ணிடை யுமிழுஞ் செந்தீக் கடாக்களிற் றுழவ வென்றான்.

     (இ - ள்.) கண்ணிடை உமிழும் செந்தீக் கடாக்களிற்று உழவ - கண்களிலே நெருப்புக்
காலும் சீற்றமிக்க ஆண் யானைகளாகிய ஏரால் பகைப்புலத்தை உழுகின்ற உழவனாகிய
விஞ்சை வேந்தே!, மண்ணிடை என்னை இங்கோர் பொருள் என மதித்து - மண்ணிடத்தே
வாழும் மனிதனாகிய என்னையும் ஒரு பொருளாக மதித்து இவ்விடத்தே, விண்ணிடை
இழிந்துவந்த விண்ணவர் கிழவன் ஒப்பாய் - வானுலகத்தை நீத்து மண்ணுலகிற்கு வந்துள்ள
அமரர்கோமான் ஆகிய இந்திரனையே ஒப்பானவனே, வந்தது - நீ இவ்வாறு எளிவந்த
செயல், எண்ணிடையுணரும் மாந்தர்க்கு - கருத்திடைவைத்து ஆராய்வார்க்கு,
இடைதெரிவரியது ஒன்று - தக்கதோர் காரணம் காண்டல் அரியதொன்றாக இராநின்றது,
என்றான் - என்று விநயத்துடன் மொழிந்தான், (எ - று.)
வானுலகத்தினின்றும் வந்த இந்திரனை ஒப்பான நீ, மானிடனாகிய என்னை மதித்து,
இவ்வாறு எளிவந்தமைக்கு, என்பால் வைத்த அன்பே அன்றிப் பிறிதொரு காரணமில்லை
என்றான் என்க.

( 144 )