(இ - ள்.) இறைநின்றது உளது என்பார் - காமம் கதுவப்பட்டார்பால் நிறை சிறிது உளதாதலும் கூடும் என்பார் உளராயின் அவர் அறியார், என்னை ?, சிறை என்பது செவ்வே செம்புனல் பெருகுமாயின் இல்லை - அணையிட்டுச் சிறைசெய்தல் என்பது, புதுப்புனல்மிக்குப் பெருகுமிடத்தே இல்லையாகும், காமம் நேர்நின்று சிறக்குமாயின் - காமவிழைவும் தனக்குரிய பிற ஏதுக்கள் பெற்றுச் சிறப்புறுமாயின் அவ்விடத்தே, நிறை என்பது இல்லை -நிறை என்று கூறப்படும் அச்செறிவு சிறிதும் இல்லையாய் ஒழியும்; இங்ஙனமாகலின், அரும்பெறல் இவளது உள்ளம் - பெண்மையாற் சிறந்து பெறற்கரிய பேறாகத்திகழும் இச்சுயம்பிரபையின் உள்ளந்தானும், சென்று - நிறைகடந்து போய், நறைநின்று கமழும் குஞ்சி நம்பிபால் - தேன்மணம் நிலைத்து நின்று கமழ்தலையுடைய தலைமயிரையுடைய திவிட்டன்பால், பட்டது - பொருந்துவதாயிற்று, அன்றே : அசை, (எ - று.) “சிறையு முண்டோ செழும்புனன் மிக்குழீஇ நிறையு முண்டோ காமம் காழ்கொளின்“ (மணிமேகலை) என்னும் அடிகளுடன் இச் செய்யுளை ஒப்புக் காண்க. |