பயாபதி சுயம்பிரபையைப் பாராட்டல்

986.

மருமகள் வணங்க முன்னே வலப்புடைக் குறங்கி னேற்றிக்
கருமைகொள் குவளைக் கண்ணி கழிநலக் கதிர்ப்பு நோக்கித்
திருமக ளிவளைச் சேருஞ் செய்தவ முடைய காளை
அருமைகொ டிகிரி யாள்தற் கையமொன் றில்லை யென்றாள்.

      (இ - ள்.) மருமகள் வணங்க முன்னே தன் மருகியாகிய சுயம்பிரபை தன்
திருவடிகளிலே வணங்கினாளாக அவள் வணங்குதற்கு முன்னரே, வலப்புடைக்
குறங்கினேற்றி - பயாபதி வேந்தன் அச்சுயம்பிரபையைத் தன்னுடைய வலப்பக்கத்துத்
தொடையின்கண் ஏறியிருக்கும்படி செய்து, கருமைகொள் குவளைக் கண்ணி - கரியநிறம்
பொருந்திய குவளைமலரை ஒத்த கண்ணையுடைய சுயம்பிரபையின், கழிநலக்கதிர்ப்பு -
மிக்க எழிலினது விளைவினை, நோக்கி - நன்கு உற்றுப்பார்த்து, திருமகளிவளைச் சேரும்
செய்தவம் உடைய காளை - திருமகளாகிய இச்சுயம்பிரபையை மனைக்கிழத்தியாகப்
பெறுதற்கு மனம் முதலியவற்றை அடக்கிச் செய்தற்குரிய நோன்பினைச் செய்துடைய
திவிட்டநம்பி, அருமைகொள் திகிரி - பெறற்கரிய இந்நிலவலயத்தை, ஆள்தற்கு ஐயம்
ஒன்று இல்லை என்றான் - ஒரே குடையின் கீழ் ஆள்வதும் திண்ணமே அதற்கு ஒரு
சிறிதும் ஐயமின்று என்றான், (எ - று.)

திருமகளைப் பெற்றவன் வையம் ஆளுதல் இயல்பாகலின் ஆள்தற்கு ஐயமொன்றில்லை
என்றான் என்க. கதிர்ப்பு - மிகுதி.

( 160 )