(இ - ள்.) மதுகரி வயந்தசேனை என இவர் ஆதியாக - மதுகரி என்பாளும் வயந்தசேனை என்பாளுமாகிய இவ்விருவர் முதலிய, புதுமலர் கொடியும் பூவும் துணர்களும் புணர்ந்த பேரார் - புதிய பூங்கொடிகள், மலர்கள், கொத்துக்கள் என்னும் இவையிற்றின் பரியாயப் பெயர்களையே தம் பெயர்களாகக் கொண்டவர்கள், எதிர்தரும் இளமையோர் - அப்போது தான் புதிதாக இளம்பருவம் வந்தெய்தப் பெற்றவர்கள், ஓர் ஆயிரத்து எண்மர் - இத்தகைய மகளிர் ஆயிரத்தெண்மர்கள், கதிர் அனகலங்கள் தாங்கி - கதிரவனைப்போன்று ஒளிதருகின்ற அணிகலன்களை அணிந்து, காப்பு மங்கலங்கள் ஏந்தி - காவலாகிய எண்வகை மங்கலப் பொருள்களையும் ஏந்திக்கொண்டு, சூழ்ந்தார் - வந்து மொய்த்தனர், (எ- று.) கமலம், குமுதம், நீலம், முல்லை, மல்லிகை, என்றின் னோரன்ன பெயருடையோர் என்க. அட்டமங்கலம் - “சாமரை தீபம் தமநியப் பொற்குடம் - காமர் கயலின் இணைமுதலாத் - தேமருவு - கண்ணாடி தோட்டி கதலிகை வெண் முரசம் - எண்ணிய மங்கலங்கள் எட்டு“ என வரும் (சிந்தாமணி - கோவிந்தை - 64 ஆம் செய்யுள் நச்சி - உரையானும் உணர்க.) |