(இ - ள்.) மற்றவர் - அம்மகளிர்கள், வலங்கொண்டு தொழுது வாழ்த்தி அடைந்தபோதின் - தன்னை வலமாக வந்து வணங்கி வாழ்த்துக்கூறி அவண் அடைந்தபொழுது, உலங்கொண்ட வயிரத்தோளான் உழைக்கல மகளிர் என்று - இவர்கள் திரள்கற்போன்ற உறுதியாய தோளையுடைய திவிட்ட நம்பியின் உழைக்கல மகளிர்கள் ஆவர் என்று கருதுவதனாலே, நலம்கொண்டு ஓர் ஆர்வம்கூர - அந்நலத்தைப் பற்றுக்கோடாகக்கொண்டு ஒரு விருப்பம் தோன்றிற்றாக, நகைமுகம் முறுவல் தோன்றிப் புலம் கொண்டது - விளக்கமுடைய தன்முகத்தே புதுவதொரு நகைதோன்றிப் புறத்தார்க்குப் புலனாந்தன்மை எய்திற்று, அதனைக்காப்பான் - அந்நகையை அயலார் அறியா வண்ணம் காக்கும் பொருட்டு, பூவொன்று நெரித்துமோந்தாள் - ஆண்டயலிற்கிடந்ததொரு மலரை விரல்களால் நெகிழ்த்து மோப்பாளாய் அந்நகையை மறைத்தாள், (எ - று.) அம்மகளிர் அடைந்து வலங்கொண்டு வணங்கியபொழுது, இவர்கள் எம்பெருமானின் ஏவன் மகளிர் என்று எழுந்த எண்ணத்தாலே, தன்முகத்தே புதிய ஒளியாகிய மெய்ப்பாடு தோன்றப், புறத்தே கிடந்த பூவினை மோப்பாளாய் அதனைப் பிறர் காணாதபடி மறைத்தாள் என்க. |