5.மந்திரசாலைச் சருக்கம்
அமைச்சர் வந்து அரசனை வணங்கல்
 
239. செஞ்சினைத் தெரியலா னருளிச் செய்தது
தன்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியார்
அஞ்சினர் நடுங்கின ராகி யாயிடை
நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார்.
உரை
   
மந்திரசாலை வருணனை
 
240. உள்ளுணின் றொலிபுறப் படாத தொண்சிறைப்
புள்ளுமல் லாதவும் புகாத நீரது
வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை
வள்ளறன் மந்திரச் சாலை வண்ணமே.
உரை
   
அரசன் கூறத் தொடங்கல்
 
241. ஆங்கமர்ந் தமைச்சரோ டரைசர் கோமகன்
பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின்
வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட
ஈங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே.
உரை
   
வேறு

மந்திரச் சுற்றத்தின் பெருமையை அரசன் கூறுதல்
 
242. மண்ணியல் வளாகங் காக்கு மன்னரால் வணக்க லாகாப்
புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட
நுண்ணிய நூலி னன்றி நுழைபொரு ளுணர்தல் செல்லார
எண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே.
உரை
   
243. வால்வளை மறலி மேயும் வளர்திரை வளாக மெல்லாம்
கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும்
மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார்
நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர்.
உரை
   
244. சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடரச் சூடி
வெற்றவெண் குடையி னீழல் வேந்தன்வீற் றிருக்கு மேனும்
மற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்பும்
அற்றமில் அரசுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே.
உரை
   
245. வீங்குநீ ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே
தாங்கலாந் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு தாரீர்
பாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப்
பூங்குலா மலங்கன் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே.
உரை
   
246. அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான
கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகும்
மற்றவர்க் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்
செற்றவர்ச் செகுக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ தன்றே.
உரை
   
247. செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால்
அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி
அறுந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார்.
உரை
   
248. வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில
தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும்
ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும்
கோள்வலிச் சீய மொய்ப்பின் சூழ்ச்சியே குணம தென்றான்.
உரை
   
249. ஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாம
சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சுழ்ச்சியுட் டோன்று மன்றே
யாழ்பகர்ந் தனிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ் சூழ்ச்சி
வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே.
உரை
   
250. ஆற்றன்மூன் றோதப் பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க
ஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும்
ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும்
ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே.
உரை
   
251. வடந்திகழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர்க்
கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரசர் வாழ்க்கை
கடந்தவழ் கடாத்த வேழங் களித்தபின் கல்வி மாணா
மடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே.
உரை
   
252. சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை
தந்திர மறிந்து ஆழ்வான் ஆழ்ச்சிசார்ந் தமையல் வேண்டும
மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்து
தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே.
உரை
   
253. எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனும்
அடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல
வடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின் மாட்சி
கொடுத்தவா நிலைமை மன்னர் குணங்களாக் கொள்ப வன்றே.
உரை
   
அரசன் தன் அமைச்சரைப் பாராட்டல்
 
254. மன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் வல்லீ ராய
பன்னுநூற் புலவீர் முன்னர்ப் பலபகர்ந் துரைப்ப தென்னை
என்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றே
இன்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா னுயர்ந்த தென்றான்.
உரை
   
சயம்பவைக் கேற்ற மணாளன் யாவனென்று மன்னன் வினாதல்
 
255. கொங்குடை வயிரக் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட் டாங்கு
நங்குடி விளக்க வந்த நங்கைதன் னலத்திற் கொத்தான்
தங்குடி விளங்க நின்ற தன்மையா னெவன்கொ லென்றான்
சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லானே.
உரை
   
அமைச்சர் செயல்
 
256. இறையிவை மொழியக் கேட்டே யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி
அறைகழ லரவத் தானை யணிமுடி யரச ரேறே
நிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று
முறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார்.
உரை
   
சுச்சுதன் கூற்று
 
257. பணிந்துமற் றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கித்
துணிந்துதன் புலமை தோன்றச் சுச்சுதன் சொல்ல லுற்றான்
இணைந்துநின் றுலவுந் தும்பி யிடையிடை யிருண்டு தோன்ற
அணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே.
உரை
   
அரசரால் மந்திரச் சுற்றத்தார் பெருமையுறுவர்
 
258. பொழிற்கதிர் பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறுந்
தொழிற்கதிர்க் கடவு டோன்றச் சூரிய காந்த மென்னும்
எழிற்கதிர்ப் பிறங்கல் வட்ட மெரியுமிழ்ந் திடுவ தன்றே
அழற்கதி ரிலங்குஞ் செவ்வே லதிர்கழ லரசர் கோவே.
உரை
   
259. கோணைநூற் றடங்க மாட்டாக் குணமிலார் குடர்க ணைய
ஆணைநூற் றடங்கக் காக்கு மரசர்த மருளி னாலே
பேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவத் தார்மேல்
பூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப வென்றான்
உரை
   
260. சூழ்கதிர்த் தொழுதி மாலைச் சுடர்ப்பிறைக் கடவு டோன்றித் தாழ்
கதிர் சொரிந்த போழ்திற் சந்திர காந்த மென்னும் வீழ்கதிர் விளங்கு
வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே போழ்கதிர் பொழிந்து பொங்கிப்
புலானிணம் பொழியும் வேலோய்.
உரை
   
261. கண்ணளித் துலக மெல்லாங் கவின்பெறக் காவல் பூண்டு
தண்ணளித் தயங்குஞ் செங்கோற் றாரவர் தவத்தி னாலே
மண்ணளித் தினிய நூலோர் மந்திர மலரு மென்றான்
விண்ணளித் திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையி னாற்கே.
உரை
   
மன்னவன் நல்லனாய் இருத்தல் வேண்டும்
 
262. கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுத்
தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்
புண்ணியக் கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்
மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே.
உரை
   
263. நிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின்
இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ?
மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயி்ன்
அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே.
உரை
   
264. மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள்
விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற்
கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவும்
தண்குளிர் கொள்ளு மேனுந் தாமிக வெதும்பு மன்றே.
உரை
   
265. தீயினம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற்
போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே
வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய்
மாயினம் படர்வ தெல்லாம் வையகம் படரு மன்றே.
உரை
   
266. மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட
இறந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்
அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்
சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய்.
உரை
   
அரசரின் பெருமையைக் கூறல்
 
267. ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யும்மை யாலே
திருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி்
இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப்
பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே.
உரை
   
268. கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்
விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார்
எண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின்
மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னோ.
உரை
   
269. குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ்
படிமிசை யில்லை யாயின் வானுள்யார் பயிறு மென்பார்
முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி
அடிமிசை நரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே.
உரை
   
270. தண்சுடர்க் கடவுள் போலத் தாரகைக் குழாங்க டாமே
விண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போல
மண்சுடர் வரைப்பின் மிக்க மக்களு மில்லை கண்டாய்
கண்சுடர் கனலச் சீறுங் கடாமுகக் களிற்று வேந்தே.
உரை
   
அரசபாரம் பொறுத்தற் கரியது என்றல்
 
271. அருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மை
வருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்
திருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிற் றிரியு மாயிற்
பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய்.
உரை
   
272. அந்தரந் திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டி
இந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின்
மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல்
தந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான்.
உரை
   
273. மரந்தலை பிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்ற
முரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும்
அருந்தவ மரைச பார மவைபொறை யரிது கண்டாய்
இரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ வென்றான்.
உரை
   
அரசரை உயர்த்த வேண்டி அமைச்சரைத் தாழ்த்துக் கூறல்
 
274. உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்து
விரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர்
கருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம்
எரிதவழ்ந் திலங்கு வேலோய் யெண்ணுவ தெண்ண மென்றான்.
உரை
   
275. பஞ்சிநன் றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து
மஞ்சில்நின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும்
அஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியு மன்ன தேயால்
வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு பூணோய்.
உரை
   
276. கொற்றவேன் மன்னர்க் கோதுங் குணமெலாங் குழுமி வந்து
முற்றுநின் றுருவு கொண்ட மூர்த்திநின் முன்னர் யாங்கள்
இற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காணக்
கற்றவர் முன்னை யேனோர் கதையொத்துக் காட்டு மன்றே.
உரை
   
சயம்பவைக்கு ஏற்ற கணவனைப் பற்றி விரிவாகக் கூற அவகாசம் கேட்டல்
 
277. தேன்மகிழ் தெரிய லாய்நின் றிருக்குலந் தெளிப்ப வந்த
பான்மகிழ்ந் தனைய தீஞ்சொற் பவழவாய்ப் பரவை யல்குல்
வான்மகிழ் மணங்கொண் மேனி யணங்கினுக் குரிய கோனை
யான்மகிழ்ந் துணர்த்தக் கேட்பி னிடைசிறி தருளு கென்றான்.
உரை
   
வேறு

விஞ்சையர் சேடியின் வருணனை
 
278. மஞ்சிவர் மால்வரைச் சென்னி வடமலை
விஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல
கஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள்
துஞ்சிய லில்லாத் துறக்க மனைத்தே.
உரை
   
279. மண்ணியல் வாழ்நர்க்கும் வானுல கொப்பது
புண்ணிய மில்லார் புகுதற் கரியது
கண்ணிய கற்பகக் கானங் கலந்தது
விண்ணிய லின்பம் விரவிற் றினிதே.
உரை
   
280. எல்லா விருதுவு மீனும் பொழிலின
தெல்லா நிதியு மியன்ற விடத்தின
தெல்லா வமரர் கணமு மிராப்பகல்
எல்லாப் புலமு நுகர்தற் கினிதே.
உரை
   
281. பொன்னிதழ்த் தாமரை பொய்கையுட் பூப்பன
பொன்னிதழ்த் தாமம் பொழில்வா யவிழ்ப்பன
பொன்னிதழ்த் தாது மணிநிலம் போர்ப்பன
பொன்னிதழ்த் தாது துகளாய்ப் பொலிவன.
உரை
   
282. கானங்க ளாவன கற்பகங் காமுகர்
தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில்
நானங்க ளாவன நாவி நறுவிரை
வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ.
உரை
   
283. மணிக்கற் படாதன மண்டபம் செம்பொன்
குணிக்கப் படாத குளிர்புனல் நீத்தங்
கணிக்கப் படாத கதிர்மணிக் குன்றம்
பிணிக்கப் படாதவர் யாரவை பெற்றால்.
உரை
   
இரத்தின பல்லவநகர வருணனை
 
284. ஆங்கதன் மேல வறுபது மாநகர்
தீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பன
நீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரிந்
தோங்கிய சூளா மணியி னொளிர்வது.
உரை
   
285. மரத்தினு மண்ணினு மாடங்கள் யாவும்
திருத்தின வில்ல(து) செம்பொ னுலகிற்
புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண்
இரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே.
உரை
   
286. வளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடி
முளைத்தெழு காம முடிவில ராகித்
திளைத்தலி னன்னகர் தெய்வ வுலகம்
களித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே.
உரை
   
287. ஆடலர் கொம்பனை யாரிளை யாடவர்
பாடக மெல்லேர் பரவிய சீறடி
தோடலர் தொங்கலங் குஞ்சியுட் டோயவைத்
தூட லுணர்த்துந் தொழிலதொன் றுண்டே.
உரை
   
288. சிலைத்தடந் தோளவர் செஞ்சாந் தணிந்த
மலைத்தட மார்பிடை மைமதர்க் கண்ணார்
முலைத்தடம் பாய முரிந்து முடவண்
டிலைத்தடத் தேங்கு மிரக்க முளதே.
உரை
   
289. வனைந்தன போலும் வளர்ந்த முலையா
ரினைந்துதங் காதல ரின்பக் கனிகள்
கனிந்து களித்தகங் காமங் கலந்துண்
முனிந்து புருவ முரிவ பலவே.
உரை
   
290. செவ்வாய்ப் பவழக் கடிகைத் திரளெனும்
அவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர்
ஒவ்வா திளைப்ப ரொசிந்தன ரோடரி
மைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே.
உரை
   
291. வளர்வன போலு மருங்குல்க ணோவத்
தளர்வன போலவர் தாமக் குழன்மேற்
கிளர்வன போதிள வாசங் கிளைத்துண்
டுளர்வன போதரு மூதை யுளதே.
உரை
   
292. பஞ்சா ரகலல்குற் பாவையர் பூண்முலைச்
செஞ்சாந் தணிந்து திகழ்ந்தமணி வண்டு
மஞ்சார் பொழிலுள் வளர்பெடை கண்டதற்
கஞ்சா வொளிக்கு மயல ததுவே.
உரை
   
293. பாசிலை மென்றழைப் பள்ளியுட் பாவையர்
தூசினு ணின்று சொரிமணிக் கோவையும்
பூசின சாந்தும் பிணையலும் போர்த்திடை
மூசின வண்டின மொய்பொழி லெல்லாம்.
உரை
   
294. காமவி லேகையுங் கற்பக மாலையும்
சேம மணிநகைச் செப்பினு ளேந்துபு
தூமக் குழலவர் தூது திரிபவர்
தாமத் தெருவிடை தாம்பலர் கண்டாய்.
உரை
   
295. தாமத் தொடையல் பரிந்து தமனிய
வாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள்
காமக் கடலைக் கலக்குங் கழலவர்
தீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே.
உரை
   
வேறு

அச்சுவக்கிரீவன் பெருமை
 
296. பொன்னகர் தன்னை யாள்வான் புரந்தர னனைய மாண்பின்
மன்னவன் மயூர கண்டன் மற்றவன் றேவி மாருள்
மின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றாள்
அன்னவள் புதல்வன் கண்டா யச்சுவக் கிரீவ னென்பான்
உரை
   
297. அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ னென்னும்
பொதியவிழ் பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரி யெய்தி்
மதிதவழ் குன்ற மெல்லாம் வணக்கிய பின்றை மண்ணும்
கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே,
உரை
   
298. சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்க் திகிரி யாளும்.
கொற்றமாங் குடைமை யாலுங் குலத்தது பெருமை யாலும்
கற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும்
வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே.
உரை
   
299. தம்பியர் நீலத் தேரோன் தயங்குதார் நீல கண்டன்
வம்புயர் மகரப் பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும்
தும்பியுந் துவைக்குந் தொங்கற் சுகண்டனென் றிவர்கள் கண்டாய்
வெம்பிய வுருமுத் தீயுங் கூற்றமும் வெதுப்பு நீரார்.
உரை
   
300. படையின தமைதி கூழின் பகுதியென் றிவற்றின் பன்மாண்
புடையவ ரவனோ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே
விடையமொன் றின்றி வென்ற விரிசுட ராழி யாளும்
நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான்.
உரை
   
301. ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தாற்றல்
கோணைநூற் பவரைத் தன்சொற் குறிப்பின்மே னிறுத்த வல்லான்
பேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான்
காணுநூற் புலமை யாருங் காண்பவ ரில்லை கண்டாய்.
உரை
   
302. தன்னலாற் றெய்வம் பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார்க்
கென்னலா லிவருக் குற்றா ரில்லையென் றிரங்கு நீரான்
பொன்னெலா நெதிய மாரப் பொழிந்திடு கின்ற பூமி
மன்னெலா மவனை யன்றி வணங்குவ தில்லை மன்னா.
உரை
   
303. குளிறுவா ளுழுவை யன்னான் குமாரகா லத்து முன்னே
களிறுநூ றெடுக்க லாகாக் கற்றிரள் கடகக் கையால்
ஒளிறுவா ளுழவ னேந்தி யுருட்டிவட் டாட வன்றே
வெளிறிலாக் கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார்.
உரை
   
304. முற்றவ முடைமை யாலே மூரிநீ ருலக மெல்லாம்
மற்றவ னேவல் கேளா மன்னவ ரில்லை மன்னா
செற்றவ னலித லஞ்சித் திறைகொடுத் தறிவித் தன்றே
நற்றவ நங்கை தோன்றா முன்னநா மாண்ட தெல்லாம்.
உரை
   
305. ஈங்குநங் குலக்கொம் பொப்பாள் பிறந்தபி னினிய னாகித்
தேங்கம ழலங்கல் வேலோன் றிறைகொள லொழிந்து சொல்லும்
ஆங்கவன் றிறங்க ளெல்லா மறிதியா லாணை வேந்தே
தீங்கியா னுணர்த்திற் றுண்டோ திருவடி தெளிக வென்றான்.
உரை
   
சயம்பகை அச்சுவக் கிரீவனுக்கு உரியளாவள்
 
306. மற்றவற் குரிய ணங்கை யென்பதென் மனத்தி னோடும்
உற்றுவந் துளது சால வுறுதியு முடைய தொக்கும்
வெற்றிவேல் விஞ்சை யாரு மஞ்சுவர் மின்செய் பைம்பூண
கொற்றவ குறிப்புண் டாயிற் கொடுப்பது குணங்கொ லென்றான்.
உரை
   
பவச்சுதன் கூறத்தொடங்குதல்
 
307. தொடர்மணி மருங்கிற் பைங்கட் சுளிமுகக் களிநல் யானை
அடர்மணிக் கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னிச்
சுடர்மணிப் பூணி னாற்குச் சுச்சுதன் சொல்லக் கேட்டே
படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகர லுற்றான்.
உரை
   
வேறு

பவச்சுதன் கூற்று
 
308. நூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடி வல்லான்
மேலா ராயு மேதைமை யாலு மிக நல்லான்
தோலா நாவிற் சுச்சுதன் சொல்லும் பொருளெல்லாம்
வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே மிகையாலோ.
உரை
   
309. தேனும் வண்டுந் தீதில பாடுஞ் செறிதாரோய்!
யானுங் கண்டே னச்சுவ கண்டன் றிறமஃதே
மானங் கொண்ட மாரதர் போரே றனையாயோர்
ஊனங்கண்டே னொட்டினு மொட்டே னுரைக்குற்றேன்.
உரை
   
சயம்பவையின் சாதகச் செய்தியைக் கூறல்
 
310. மானக் கோதை மாசறு வேலோய் வரவெண்ணி
நானக் கோதை நங்கை பிறந்த நாளானே
வானக் கோளின் மாண்புணர் வார்கண் மறுவில்லாத்
தானக் கோளிற் சாதக வோலை தலைவைத்தார்.
உரை
   
311. காவிப் பட்டங் கள்விரி கானற் கடனாடன்
மேவிப் பட்டம் பெற்றவன் காதன் மேயானால்
ஏவிப் பட்ட மீந்தவ ரெல்லா மினிதேத்தும்
தேவிப் பட்டஞ் சேர்பவ ளன்றே திருவன்னாள்.
உரை
   
312. நங்கோ னங்கை நன்மக னாகி நனிவந்தான்
தங்கோ னேவத் தானிள வேந்தாய்த் தலைநின்றான்
எங்கோ னென்றே யிவ்வுல கேத்து மியறன்னால்
செங்கோ லின்பஞ் சேர்பவ னன்றே செருவேலோன்.
உரை
   
313. என்றா லன்றச் சாதக வோலை யெழுதிற்றும்
குன்றா வென்றிக் குன்றுறழ் யானைக் கொலைவேலோய்
நன்றா நங்கைக் கொன்றிய காமப் பருவத்தா
னின்றா னன்றே யின்றுணை யாகுந் நிலைமேயான்.
உரை
   
அச்சுவ கண்டனுக்குரிய ஊனங்களைக் கூறுதல்
 
314. ஆழிக் கோமா னச்சுவ கண்ட னவனுக்கே
ஊழிக் கால மோடின வென்னு முரையாலும்
தாழிக் கோலப் போதன கண்ணா டகுவாளோ
சூழிக் கோலச் சூழ்களி யானைச் சுடர்வேலோய்.
உரை
   
315. கண்ணார் கோதைக் காமரு வேய்த்தோட் கனகப்பேர்
மண்ணார் சீர்த்திச் சித்திரை யென்னு மடமா
எண்ணா ரின்பக் காதலி யாகி யியல்கின்றாள்
பெண்ணார் சாயல் பெற்றன டேவிப் பெறுபட்டம்.
உரை
   
316. வானோ ருட்கு மக்கெளா ரைஞ்ஞூற் றுவர்தம்முள்
ஈனோ ருட்கு மிரத்தின கண்ட னெனநின்றான்
ஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான்
ஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய்.
உரை
   
317. அன்னா னாயி னாதலி னன்றே யவனல்லால்
என்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும்
இன்னா னின்னா னிந்நக ராள்வா னிவனென்றே
அன்னா னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான்.
உரை
   
318. மையார் சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற்
கையா ரெஃகிற் காளைக டம்முட் கமழ்கோதை
மெய்யா மேவு மேதகு வானை மிக வெண்ணிக்
கொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் கொடு வென்றான்.
உரை
   
வேறு

கின்னர கீதவரசன் பவனஞ்சன்
 
319. கேடிலிம் மலையின் மேலாற் கின்னர கீத மாளும்
தோடிலங் குருவத் தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல்
பாடல்வண் டிமிரும் பைந்தார்ப் பவனஞ்ச னென்ப பாரித்
தாடலம் புரவி வல்ல வரசிளங் குமர னென்றான்.
உரை
   
அமிழ்தமாபதியரசன் வேகமாரதன்
 
320. அளந்தறி வரிய செய்கை யமிழ்தமா பதியை யாளும்
வளந்தரு வயிரப் பைம்பூண் மன்னவன் சிறுவன் வண்டார்
விளங்கொளி யுருவத் திண்டோள் வேகமா ரதனை யன்றே
இளங்களி யுழுவை யாக விருநிலம் புகழ்வ தென்றான்.
உரை
   
மேகமாபுரவரசன் பதுமரதன்
 
321. வேழத்தாற் பொலிந்த சோலை மேகமா புரம தாளும்
ஆழித்தே ரரவத் தானை யரசர்கோன் புதல்வ னந்தார்ப்
பாழித்தோ ளுருவச் செங்கட் பதுமத்தேர்ப் பெயரி னானை
ஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவத் தாரோய்.
உரை
   
இரத்தின புரவரசன் அருங்கலத் தேரின்பேரோன்
 
322. இலங்கொளி மாட வீதி யிரத்தின புரம தாளும்
உலங்கெழு வயிரத் திண்டோ ளொளிமுடி யரசன் செம்மல்
அலங்கலம் புரவித் தானை யருங்கலத் தேரின் பேரன்
குலங்கெழு குரிசில் கண்டாய் கொண்டல்வா னுருமொ டொப்பான்.
உரை
   
கீதமாபுரியரசன் அரிகண்டன்
 
323. நங்கண்மால் வரையின் மேலோ னன்னகர் கீத மென்னும்
திங்கண்மால் புரிசை வேலிச் செழுநக ரரசன் செம்மல்
அங்கண்மா ஞால மாளு மரிகண்ட னவனை விண்மேல்
செங்கண்மால் முனியு மேனுஞ் செய்வதொன் றில்லை கண்டாய்.
உரை
   
திரிபுரவரசனளிதாங்கன்
 
324. சேந்தெரி செம்பொன் வீதித் திரிபுர மதனை யாளும்
வாய்ந்தெரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் மல்லா
டேந்துதோ ளரசர் போரே றிவனளி தாங்க னென்பான்
காய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ டொப்பான்.
உரை
   
சித்திரகூடவரசன் ஏமாங்கதன்
 
325. செந்தளிர் புதைந்த சோலைச் சித்திர கூட மாளும்
அந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் சிறுவ னந்தார்
இந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம்
மந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா.
உரை
   
அச்சுவபுர வரசன் கனகசித்திரன்
 
326. அருமணி யடுத்த வீதி யச்சுவ புரம தாளும்
திருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும்
கருமணி துதைந்த பைந்தார்க் கனகசித் திரனை யன்றே
ஒருமணி திலதமாக வுடையது நிலம தென்றான்.
உரை
   
ஸ்ரீநிலை யரசன் சித்திர ரதன்
 
327. சீரணி முழவ மோவாச் சிரீநிலை யதனை யாளும்
காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொனார்ந்த
தேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் பேரான்
தாரணி மார்பனன்றே தரணிக்கோர் திலதமாவான்.
உரை
   
கனக பல்லவ அரசன் சிங்க கேது
 
328. கற்றவர் புகழுஞ் சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும்
கொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான்
செற்றவர்ச் செகுக்குஞ் செய்கைச் செருவல்லான் சிங்க கேது
மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான்,
உரை
   
இந்திர சஞ்சயவரசன் அருஞ்சயன்
 
329. இஞ்சிசூ ழெரிபொன் மாடத் திந்திரன் மிசைந்த நாமச்
சஞ்சய முடைய கோமான் றாண்முளை தரணி யெல்லாம்
அஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண்
மஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியெனக் கருது மன்னா!.
உரை
   
330. ஈங்கிவர் தம்முள் யாவ ரிலங்கிடும் பவழச் செவ்வாய்க்
கோங்கிவர் குவிமென் கொங்கைக் கொம்பினுக் குரிய காளை
ஆங்கவன் றன்னை யாராய்ந் தறிந்தருள் செய்க வென்றான்
வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான்.
உரை
   
வேறு

பவச்சுதன்கூற எல்லாரும் அதுவே தகும் என்றல்
 
331. மன்னர் நீண்முடி மென்மணித் தொத்தொளி
துன்னு சேவடி யாற்குச் சுருங்கவே
பன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லலும்
அன்ன தேயென்றெல் லார்களு மொட்டினார்.
உரை
   
சுதசாகரன் கூற்று
 
332. அல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும்
வல்லி யாங்கணி சாந்தும் வனைந்துராய்
மல்லி னான்மலி மார்பற்கு மற்றிவை
சொல்லி னான்சுத சாகர னென்பவே.
உரை
   
333. ஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல்
பாழி யாகின்ற திண்டோட் பவச்சுதன்
சூழி யானையி னாய்சொலப் பட்டன
ஊழி யாருரையும் மொத்துள கண்டாய்.
உரை
   
அச்சுவ கண்டனது பகைமைக்குப் பிறர் அஞ்சுவர் என்றல்
 
334. ஆயி னுஞ்சிறி துண்டணி வண்டினம்
பாயி னும்பனிக் கும்படர்க் கோதைதன்
வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர்
தோயி னும்பகை யாஞ்சுடர் வேலினய்.
உரை
   
335. வண்ட வாமுடி மன்னருண் மற்றவன்
தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி
துண்டி யானுரைப் பானுறு கின்றது
விண்டு வாழுநர் மேனகு வேலினாய்.
உரை
   
மேகவாகனன் பெருமை
 
336. போக மாண்டவிச் சேடியோர் பொன்னகர்க்
கேக நாயக னாயினி தாள்பவன்
மேக வாகன னென்றுளன் வீழ்மத
வேக மால்களி றும்மிகு வேலான்.
உரை
   
மேகவாகனன் தேவி
 
337. நாக மலைகண் மேனகு வண்டினம்
ஏக மாலைய வாயொலி கைவிடாத்
தோகை மாமயில் போற்சுரி கூந்தலாள்
மேக மாலினி யென்றுள மிக்குளாள்.
உரை
   
மேகமாலினியிடம் விச்சுவன் பிறத்தல்
 
338. தேவி மற்றவ டெய்வம் வழிபட
மேவி வந்தனன் விச்சுவ னென்பவன்
ஓவி றொல்புக ழானுளன் கூற்றமு
மேவி நின்றினி தாண்டிடு மீட்டினான்.
உரை
   
339. மையில் வானுல காண்டுமண் ணோர்களுக்
குய்யும் வாயி லுணர்த்திய தோன்றிய
ஐய னாற்பிற வாரஞர் நீங்கியி்வ்
வைய மாயதெல் லாம்வளர் கின்றதே.
உரை
   
340. மயகுல் வானுல காண்டு வரத்தினால்
இங்கு வந்தன னீண்டளி யீந்தபிற்
றிங்கள் வாளொளி யிற்றிகழ் சோதியாய்த்
தங்கு வானுல கிற்றகை சான்றதே.
உரை
   
341. தன்னி னாய்விளை வித்திரு ளைத்தவிர்த்
தின்ன னாகவென் றெண்ணிய வெண்ணமோ
டன்ன னாதலி னாலவன் மேற்பிறர்
என்ன ரேனுமின் னாதன வெண்ணிலார்.
உரை
   
சயம்பவை விச்சுவனுக்குரியவள் என்றல்
 
342. காம்பின் வாய்ந்தமென் றோளியக் காதலன்
தீம்பன் மாலைநன் மார்பகஞ் சேருமேல்
ஆம்பன் மாலையு மாய்கதிர்த் திங்களும்
தாம்பன் மாலையுஞ் சார்ந்த னைத்தென்றான்.
உரை
   
விச்சுவன் தங்கை சோதிமாலையின் சிறப்பு
 
343. நம்பி தங்கை நகைமலர்க் கற்பகக்
கொம்பி னன்னவள் கொங்கணி கூந்தலாள்
அம்பி னீண்டரி சிந்திய மாக்கயல்
வம்பி னீண்டமை வாணெடுங் கண்ணினாள்.
உரை
   
344. கோதின் மாலைகள் மேற்குதி கொண்டெழு
கீத மாலைய கின்னர வண்டினம்
ஊதி மாலைய வாயுறை யுங்குழல்
சோதி மாலையென் பாள்சுடர்ப் பூணினாள்.
உரை
   
சோதிமாலை அருக்ககீர்த்திக்குரியவள் என்றல்
 
345. வெம்பு மால்களி யானை விலக்குநீர்
நம்பி ஞாயிறு சேர்பெய ராற்கணி
அம்பி னீளரி வாணெடுங் கண்ணவள்
வம்பு சேர்முலை வாரி வளாகமே.
உரை
   
346. இன்ன வாறிசை யப்பெறின் யாவரும்
என்ன வாறு மிகப்பவ ரின்மையால்
அன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான்
சொன்ன வாறுகொண் டீசுடர் வேலோய்
உரை
   
வேறு

சுமந்திரியின் கூற்று
 
347. கொங்குவண் டலர்ந்த தாரான் குறிப்பறிந் திவைக ளெல்லாம்
அங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறி
நங்கைதன் றாதை தோழர் நால்வரு ணால்வ னாவான்
தொங்கலந் துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல லுற்றான்.
உரை
   
348. அண்ணலங் களிகொள் யானை யச்சுவ கண்டன் மூத்தாற்
கெண்ணலுந் தகுவ தன்றா லிவன்பணி யிகற்ற லாற்றாக்
கண்ணலங் கவரும் வேலோர்க் கீயினுங் கரும மன்றால்
பெண்ணலங் கனிந்த பேதை யிருப்பதும் பெருமை யன்றே.
உரை
   
சுரேந்திரகாந்தத் தரசகுமாரனது வரலாறு
 
349. சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர காந்த மாளும்
தாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன்
போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் குரிமை செய்வ
தாழ்கதிர் விலங்க லாளு மரசவஃ தரிது கண்டாய்.
உரை
   
350. மங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி
அங்கயல் பிறழ்வ போலு மையரி யடர்த்த வாட்கண்
பங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில் பயின்ற போழ்தும்
தங்கிய மனத்த னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான்.
உரை
   
351. மண்கணை முழவ மேங்க மடந்தையர் நுடங்கு மாறும்
பண்கனிந் தினிய பாடற் பாணியும் பயின்று மேவான்
விண்கனிந் தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து நின்றான்
கண்கனி யுருவக் காளை கடவுளர் தகையன் கண்டாய்.
உரை
   
352. செறிகழ லவற்குத் தாதை சித்திர கூட மென்னும்
அறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்ந்த காலை
இறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேர
உறுவனை வணங்கிக் கேட்டான் மகன்றிற முழவுத் தோளான்.
உரை
   
353. பங்கயப் பழன வேலிப் பவகிரி யரசன் பைந்தார்
தங்கிய தடங்கொண் மார்பன் சயசேன னவற்குத் தேவி
செங்கய னெடுங்கட் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளை
வெங்களி யானை வல்ல விசயபத் திரனென் பானே.
உரை
   
354. மந்திரத் தரசர் கோவே மற்றவன் வையங் காக்கும்
தந்திரந் துறந்து நோற்று மறைந்துசா சார மென்னும்
இந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முந்நீர்
அந்தர காலந் தேவர்க் கரசனா யாண்டு வந்தான்.
உரை
   
355. ஆதலா லமர போக நுகர்ந்தவ னரைசர் செல்வம்
போதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான்
தீதலொ மகல நோற்றுச் சிவகதி சேரு மென்றக்
கோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூறக் கேட்டோம்.
உரை
   
சுரேந்திர காந்தத் தரசகுமாரன் தக்கவன் அல்லன் என்றல்
 
356. அம்மையாற் றவங்க டாங்கி யலர்ந்தநல் லறிவி னாலும்
இம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும்
செம்மையாற் கடவுட் டானஞ் சேர்வதே சிந்தை யாற்கு
மெய்ம்மையாற் கருமச் சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே.
உரை
   
சுயம்வரமும் தக்கதன்று எனல்
 
357. வாரணி முரச மார்ப்ப வயிரொடு வளைக ளேங்கத்
தாரவர் குழாங்க ளீண்டச் சயமர மறைது மேனும்
ஆரவி ராழி யானை யஞ்சுது மறிய லாகா
கார்விரி தடக்கை வேந்தே கழலவர் கரும மென்றான்.
உரை
   
விதியின் வலிமை
 
358. ஒன்றுநாங் கருதிச் சூழி னூழது விளைவு தானே
கன்றிநாங் கருதிற் றின்றி மற்றொர்வா றாக நண்ணும்
என்றுநாந் துணிந்த செய்கை யிதன்றிறத் தென்ன மாட்டாம்
இன்றுநாந் துணிது மாயி னினிச்சிறி துரைப்ப னென்றான்.
உரை
   
சதவிந்து என்ற நிமித்தகனை வினவுவோம் என்றல்
 
359. வீழ்புரி விளங்கு நூலோய் மேலுநங் குலத்து ளார்கட்
கூழ்புரிந் துறுதி கூறு முயர்குல மலர நின்றான்
தாழ்புரி தயங்கு நுண்ணூற் சதவிந்து மொழிந்த வாற்றால்
யாழ்புரி மழலை யாள்கண் ணாவதை யறிது மென்றான்.
உரை
   
பிறர் கூற்று
 
360. என்றவன் மொழிந்த போழ்தி னேனையா ரினிதி னோக்கி
மின்றவழ் விளங்கு வேலோய் மெய்யினு மேவல் வேண்டும்
சென்றவன் மனையு ணீயே வினவெனச் சேனை வேந்தன்
நன்றவர் மொழிந்த வெல்லா நல்லவா நயந்து கேட்டான்.
உரை
   
361. இந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல் வேண்டா
மந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா
சந்திரன் றவழ நீண்ட தமனியச் சூல நெற்றி
அந்தரந் திவளு ஞாயிற் கோயில்புக் கருளு கென்றார்.
உரை
   
சடியரசன் அரண்மனையை அடைதல்
 
362. மந்திரக் கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன்
சுந்தரச் சுரும்புந் தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்ப
வந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச
அந்தரக் கடைக ணீங்கி யகனக ரருளிப் புக்கான்.
உரை
   
வேறு

உச்சிக்காலம் உற்றமை
 
363. மிகுகதிர் விலங்கலார் வேந்தன் றேனுடைந்
துகுகதிர் மண்டப மொளிர வேறலும்
தொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளி
நகுகதிர் மண்டில நடுவு நின்றதே.
உரை
   
பலவகைக்காட்சி
 
364. கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத்
தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா
வெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன
வண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே.
உரை
   
365. ஒலிவிழா வண்டின மூத வூறுதேன்
மலிவிழாப் பிணையலு மணங்கொள் சாந்தமும்
பலிவிழாப் பதாகையும் பரந்து பாடுவார்
கலிவிழாக் கழுமின கடவுட் டானமே.
உரை
   
366. குண்டுநீர்க் குழுமலர்க் குவளைப் பட்டமும்
மண்டுநீர் மரகத மணிக்கல் வாவியும்
கொண்டுநீ ரிளையவர் குடையக் கொங்கொடு
வண்டுநீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே.
உரை
   
367. பங்கயத் துகள்படு பழன நீர்த்திரை
மங்கையர் முலையொடு பொருத வாவிகள்
அங்கவ ரரிசன மழித்த சேற்றினும்
குங்குமக் குழம்பினுங் குழம்பு கொண்டவே.
உரை
   
368. அங்கள்வாய்க் கயம்வள ராம்ப றூம்புடைப்
பொங்குகா டேர்பட ஞெறித்துப் பூவொடு
கொங்கைவாய்க் குழலவர் குளிப்ப விட்டன
திங்கள்வாண் முகவொளி திளைப்ப வீண்டவே.
உரை
   
369. மாயிரும் பனித்தடம் படிந்து மையழி
சேயரி நெடுமலர்க் கண்கள் சேந்தனெத்
தாயரை மறைக்கிய குவளைத் தாதுதேன்
பாயமோந் திறைஞ்சினார் பாவை மார்களே.
உரை
   
370. சந்தனத் துளித்தலை ததும்பச் சாந்தளைந்
தந்தரத் தசைப்பன வால வட்டமும்
எந்திரத் திவலையு மியற்றி யீர்மணல்
பந்தருட் பாலிகைக் குவளை பாய்த்தினார்.
உரை
   
371. குருமணித் தாமரைக் கொட்டை சூடிய
திருமணிப் பீடமுஞ் செதுக்க மாயவும்
பருமணிப் பளிங்கென விளங்கு வான்பலி
அருமணிக் கொம்பனா ரலர வூட்டினார்.
உரை
   
காலக் கணிதர் மன்னனுக்கு நாழிகையை அறிவித்தல்
 
372. அன்னணம் பொழுதுகண் ணகற்ற வாயிடைப
பன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக்
கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை
மன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார்.
உரை
   
மன்னவன் உண்டியை அருந்துதல்
 
373. வாரணி முலையவர் பரவ மன்னவன்
ஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந்
தேரணி யின்னிய மிசைத்த வின்பமோ
டாரணி தெரியலா னமிழ்த மேயினான்.
உரை
   
மன்னன், நிமித்திகன் மனைக்குப் புறப்படுதல்
 
374. வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியன்
வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையன்
அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல்
கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான்.
உரை
   
375. பொன்னவிர் மணிக்கழல் புலம்பத் தேனினம்
துன்னலர் தொடையலிற் சுரும்பொ டார்த்தழெ
மன்னவ னடத்தொறு மகர குண்டலம்
மின்மலர்ந் திலங்குவில் விலங்க விட்டவே.
உரை
   
376. நெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர்
கையிலங் கீட்டியர் கழித்த வாளினர்
மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்
வையகங் காவலன் மருங்கு சுற்றினார்.
உரை
   
377. சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும்
கரும்புசூழ் கிளவியர் சொரிந்து கைதொழ
நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை
அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான்.
உரை
   
நிமித்திகன் செயல்
 
378. எங்குலம் விளங்கவிங் கருளி வந்தவெங்
கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென
மங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனுக்
கங்கலர் கேள்வியா னாசி கூறினான்.
உரை
   
மன்னவன் பீடத்து அமர்தல்
 
379. கொண்டமர்ந் தகிற்புகை கழுமிக் கோதைவாய்
விண்டமர்ந் தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய்
வண்டமர்ந் தொலிசெய மருங்குல் கொண்டதோர்.
மண்டப மணித்தல மன்ன னெய்தினான்.
உரை
   
சுற்றத்தாரை அப்புறப்படுத்த மன்னவன் நினைத்தல்
 
380. தழையவிழ் சந்தனப் பொதும்பு போன்மது
மழைதவழ் மண்டப மலிர வீற்றிருந்
துழையவர் குறிப்பறிந் தகல வொண்சுடர்க்
குழையவன் குமரிதன் கரும மெண்ணினான்.
உரை
   
நிமித்திகன் கூற்று
 
381. கனைத்தெதிர் கதிர்மணிக் கடகஞ் சூடிய
பனைத்திர ளனையதோட் படலை மாலையான்
மனத்தினை மறுவினூல் வாயி னாற்சொல
நினைத்திவை விளம்பினா னிமித்த நீதியான்.
உரை
   
382. மணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல்
வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங்
கணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன்
அணங்கெழில் விரிந்தநூ லலர்ந்த நாவினான்.
உரை
   
383. வெண்ணிலா விரிந்தனெ விளங்கு மாலையள்
கண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனை
மண்ணிலா மறுகிடை வலங்கொண் டெய்தினாள்
எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வண்ணமே.
உரை
   
384. பொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலை
மின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம்
என்சொலா லின்றியா னியம்பு நீரதோ
மன்சுலா வகலநின் றலரும் வாளினாய்.
உரை
   
புராணநூல் வரலாறு கூறுதல்
 
385. ஆதிநா ளறக்கதி ராழி தாங்கிய
சோதியான் றிருமொழி விளக்கித் தோன்றுமால்
போதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம்
மாதராள் வனமுலைக் குரிய மைந்தனே.
உரை
   
மன்னவன் மகிழ்ச்சி
 
386. அம்மயி லனையவ டிறத்தி னாரியன்
செம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும்
மெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன்
பொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோன்றினான்.
உரை
   
மன்னவன் வினா
 
387. முன்னிய வுலகுகண் விடுத்த மூர்த்தியான்
மன்னிய திருமொழி யகத்து மாதராள்
என்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனுக்
கன்னவ னாதிமா புராண மோதினான்.
உரை
   
உலகோற்பத்தி முதலியன கூறல்
 
388. மூவகை யுலகினு ணடுவண் மூரிநீர்த்
தீவின தகலமுஞ் சிந்து வட்டமும்
ஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறை
ஏவலாய் விரிந்தவை யெண்ணி றந்தவே,
உரை
   
அவனி வட்டம்
 
389. மந்தர நெடுமலை நடுவின் வாய்ந்தது
சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது
நந்திய நளிசினை நாவன் மாமரம்
அந்தரத் துடையதிவ் வவனி வட்டமே.
உரை
   
390. குலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய்
மலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க்
கொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ்
அலைதிரை நெடுங்கட லவனி வட்டமே.
உரை
   
391. மாற்றரு மண்டில மதனு ளூழியால்
ஏற்றிழி புடையன விரண்டு கண்டமாம்
தேற்றிய விரண்டினுந் தென்மு கத்தது
பாற்றரும் புகழினாய் பரத கண்டமே.
உரை
   
392. மற்றது மணிமய மாகிக் கற்பகம்
பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய்
முற்றிய வூழிமூன் றேறி மீள்வழிப்
பிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார்.
உரை
   
393. வெங்கதிர்ப் பருதியும் விரவு தண்பனி
அங்கதிர் வளையமு மாதி யாயின
இங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை
பொங்கிய புரவியாய் போக காலமே.
உரை
   
அருகபரனது தோற்றம்
 
394. ஊழிமூன் றாவதோய்ந் திறுதி மன்னுயிர்
சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்
ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள்
ஆழியங் கிழமையெம் மடிக டோன்றினார்.
உரை
   
395. ஆரரு டழுவிய வாழிக் காதியாம்
பேரருண் மருவிய பிரான்றன் சேவடி
காரிருள் கழிதரக் கண்க வின்றரோ
சீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே.
உரை
   
396. அலந்தவ ரழிபசி யகற்றும் வாயிலும்
குலங்களுங் குணங்களுங் கொணர்ந்து நாட்டினான்
புலங்கிளர் பொறிநுகர் விலாத புண்ணியன்
நலங்கிளர் திருமொழி நாத னென்பவே.
உரை
   
பரதமன்னனது தோற்றம்
 
397. ஆங்கவன் றிருவரு ளலரச் சூடிய
வீங்கிய விரிதிரை வேலி காவலன்
ஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான்
பாங்குயர் பரிதிவேற் பரத னென்பவே.
உரை
   
பரதன் அருகதேவனை வணங்கல்
 
398. ஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன்
பாழியா னவின்றதோட் பரத னாங்கொர்நாள்
ஊழியா னொளிமல ருருவச் சேவடி
சூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான்.
உரை
   
நன்னிமித்தம்
 
399. கதிரணி மணிமுடி வணங்கிக் காவலன்
எதிரது வினவினா னிறைவன் செப்பினான்
அதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர்
முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே.
உரை
   
அருகபரன் கூற்று

தீர்த்தங்கரர், சக்கரவர்த்திகள், பலவாசுதேவர் கணக்கு
 
400. என்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள்
நின்முத லீரறு வகையர் நேமியர்
மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர்
தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே.
உரை
   
மரிசி தோன்றுவான் என்றல்
 
401. மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப்
பொன்னவிர் போதன முடைய பூங்கழல்
கொன்னவில் வேலவன் குலத்துட் டோன்றினால்
அன்னவன் கேசவர்க் காதி யாகுமே.
உரை
   
திவிட்டன் செயலைக் கூறுதல்
 
402. கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை
காசறு வனப்பினோர் கன்னி யேதுவால்
ஆசற வச்சுவக் கிரீவ னாவியும்
தேசறு திகிரியுஞ் செல்வன் வௌவுமே.
உரை
   
403. தேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபின்
ஆரணி யறக்கதி ராழி நாதனாம்
பாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன்
சீரணி திருமொழித் தெய்வத் தேவனே.
உரை
   
404. ஆதியு மந்தமு நடுவு நம்மதே
ஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோ
காதுவே லரசர்கோக் களிப்புற் றானிது
போதுசே ரலங்கலாய் புராண நீர்மையே.
உரை
   
திவிட்டன் அவதாரம்
 
405. அன்னணம் புராணநூ லகத்துத் தோன்றிய
கன்னவி லிலங்குதோட் காளை யானவன்
மின்னவில் விசும்பினின் றிழிந்து வீங்குநீர்
மன்னிய வரைப்பக மலிரத் தோன்றினான்.
உரை
   
406. திருவமை சுரமைநா டணிந்து செம்பொனால்
பொருவரு போதன முடைய பூங்கழல்
செருவமர் தோளினான் சிறுவ ராகிய
இருவரு ளிளையவ னீண்டந் நம்பியே.
உரை
   
சயம்பவையைத் திவிட்டவனுக்குத் தருமாறு கூறுதல்
 
407. மீனுடை விரிதிரை வையங் காக்கிய
மானுட வுடம்பினான் மறைந்து வந்தவத்
தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம்
தானடைந் தமர்வதற் குரிய டையலே.,
உரை
   
408. ஆங்கவற் கீந்தபி னாழி தாங்கிய
ஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும்
தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும்
வீங்கிய வுவகையன் வேந்த னாயினான்.
உரை
   
சதவிந்து தன் நிமித்தத்துக்கு அடையாளம்
 
409. கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி
இங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர்
திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு
சிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே.
உரை
   
சடியரசனது மகிழ்ச்சி
 
410. நிமித்திக னுரைத்தலு நிறைந்த சோதியான்
உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண்
இமைத்தில னெத்துணைப் பொழுது மீர்மலர்ச்
சுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான்.
உரை
   
சதவிந்துவுக்கு மன்னன் நாடளித்தல்
 
411. இருநிலத் தலைமக னியன்ற நூற்கடல்
திருநிதிச் செல்வனைச் செம்பொன் மாரியாச்
சொரிநிதிப் புனலுடைச் சோதி மாலையென்
றருநிதி வளங்கொணா டாள நல்கினான்.
உரை
   
மன்னன் நகர்திரும்பி, தன் மனைவிக்கு யாவும் கூறுதல்
 
412. மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன்
பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது
கன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும்
அன்னமென் னடையவட் கறியக் கூறினான்.
உரை
   
சயம்பவை பெருமையை மன்னன் கூறுதல்
 
413. தொக்கிள மலர்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே.
உரை
   
414. தலைமகன் றாடனக் காகச் சாகைய
நிலைமைகொண் மனைவியா நிமிர்ந்த பூந்துணர்
நலமிகு மக்களா முதியர் தேன்களாக்
குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே.
உரை
   
415. சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு
மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால்
வாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க்
காழிநீர் வையகத் தரிய தாவதே.
உரை
   
416. தகளிவாய்க் கொழுஞ்சுடர் தனித்துக் கோழிருள்
நிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமே
துகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய்
மகளெலாத் திசைகளு மலிர மன்னினாள்.
உரை
   
417. வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி
நலம்புரி பவித்திர மாகு நாமநீர்
பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி
குலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே,
உரை
   
418. மக்களை யிலாதவர் மரத்தொ டொப்பவென்
றொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர்
நக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர்ச்
செக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய்.
உரை
   
419. மாவினை மருட்டிய நோக்கி நின்மகள்
பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித்
தேவனுக் கமிழ்தமாந் தெய்வ மாமென
ஓவினூற் புரோகித னுணர வோதினான்.
உரை
   
வாயுவேகை செயல்
 
420. மத்தவார் மதகளிற் றுழவன் மற்றிவை
ஒத்தவா றுரைத்தலு முவகை கைம்மிக
முத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல்
தொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள்.
உரை
   
421. மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக்
கன்னிநின் னருளினே கருதப் பட்டனள்
மன்னவ ரருளில ராயின் மக்களும்
பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே.
உரை
   
தந்தையாலேயே சயம்பவை சிறப்படைந்தாள் எனல்
 
422. பிடிகளை மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர்
முடிகளின் மணிபொர முரலு மொய்கழல்
அடிகள தருளினா லம்மென் சாயலிக்
கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள்.
உரை
   
மன்னனது மகிழ்ச்சி
 
423. திருமனைக் கிழத்திதன் றேங்கொள் சின்மொழி
மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள்
பருமணிப் பூண்முலை பாய மார்பிடை
அருமணித் தெரியறே னழிய வைகினான்.
உரை
   
மன்னவன் மகனுக்கும் அமைச்சருக்கும் நடந்தவற்றைக் கூறுதல்
 
424. மற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும்
கொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந்
திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல்
கற்றநா வலனது கதையுஞ் சொல்லினான்.
உரை
   
கேட்டவர் கூறத் தொடங்கல்
 
425. வீங்கிய முலையவ டிருவும் வெம்முலைக்
கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந்
தாங்கிய புகழவன் மொழியத் தாரவர்
வீங்கிய வுவகையர் வியந்து சொல்லினார்.
உரை
   
"பயாபதிபால் தூதுனுப்புவோம்" என்றல்
 
426. தெய்வமே திரிகுழற் சிறுமி யாவதற்
கையமே யொழிந்தன மனலும் வேலினாய்
செய்வதோர் தூதினித் திவிட்டன் றாதையாம்
வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே.
உரை
   
மருசியே, தூது செல்லத் தகுந்தவன் என்றல்
 
427. கற்றவர் கற்றன கருதுங் கட்டுரைக்
குற்றன வுற்றவுய்வுத் துரைக்கு மாற்றலாம்
மற்றவன் மருசியே யவனை நாம்விடச்
சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே.
உரை
   
மருசி வருகை
 
428. காரியந் துணிந்தவர் மொழியக் காவலன்
மாரியந் தடக்கையான் வருக வென்றொரு
சீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன்
ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான்.
உரை
   
மருசி சுரமை நாடு செல்லல்
 
429. மன்னவன் பணியொடு மருசி வானிடை
மின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோய்த்
துன்னினன் சுரமைநாட் டகணி சூடிய
பொன்னகர்ப் புறத்தோர் பொழிலி னெல்லையே.
உரை
   
430. புதுமலர்ப் புட்பமா கரண்ட மென்னுமப்
பொதுமலர்ப் பூம்பொழில் புகலும் பொம்மென
மதுமலர் பொழிதர மழலை வண்டினம்
கதுமல ரிணையொடு கலவி யார்த்தவே.
உரை