6.தூதுவிடு சருக்கம்
மருசி தங்கிய சோலையின் இயல்பு
 
431. மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்
திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா
வரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம்
பொரிவிரிவன புதுமலரன புன்குதிர்வன புறனே.
உரை
   
432. நிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம்
எழினகுவன விளமலரன வெழுசண்பக நிகரம்
குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம்
அழனகுவன வலர்நெரிதர வசைநிலையவ சோகம்.
உரை
   
433. எழுதுருவின வெழுதளிரன விணரணிவன விரதம்
இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம்
கழுதுருவின கஞலிலையன கழிமடலின கைதை
பொழுதுருவின வணிபொழிலின பொழிதளிரன புன்னை.
உரை
   
434. வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடுமௌவல்
நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்
குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி
ஒளிர்கொடியன வுயர்திரளினொ டொழுகிணரனவோடை.
உரை
   
435. குடையவிழ்வன கொழுமலரின குளிர்களியன கோங்கம்
புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம்
கடியவிழ்வன கமழ்பாதிரி கலிகளிகைய சரளம்
இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே.
உரை
   
சோலைக்கு வண்டு முதலியவை அணியாயின
 
436. மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி
குதிமகிழ்வன குவிகுடையன நுதிகோதுபு குயில்கள்
புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை
விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே.
உரை
   
மருசி ஒரு பொய்கைக் கரையை அடைதல்
 
437. அதுவழகுத னகமகிழ்வுற வலர்புகழவ னடைய
இதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யவியா
விதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரிப்
பொதியவிழ்வன புதுமலரணி பொய்கைக் கரைபுக்கான்.
உரை
   
மருசியை இயற்கை வரவேற்றல்
 
438. புணர்கொண்டெழு பொய்கைக்கரை பொருதிவலைகள் சிதறாத்
துணர்கொண்டன கரைமாநனி துறுமலர்பல தூவா
வணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவா
இணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ் விடமே.
உரை
   
மருசி அசோக மரத்தைக் காணுதல்
 
439. புனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணல்மேல்
மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகை யொண்
கனல்விரவிய மணியிடைகன கங்கணி யணிதிரளின்
அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான்.
உரை
   
துருமகாந்தன் மருசியை வரவேற்றல்
 
440. அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான்
பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென்றுரை புகலா
மதியின்னொளி வளர்கின்றதொர் மணியின் சிலைகாட்ட
விதுவென்னென விதுவென்னென வினையன்பல சொன்னான்.
உரை
   
வேறு
 
441. மினற்கொடி விலங்கிய விலங்கன்மிசை வாழும்
புனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலிதாரோய
நினக்கென வியற்றிய நிலாநிழன்ம ணிக்கல்
மனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான்.
உரை
   
மருசி அவ்விடத்தைப் புகழ்தல்
 
442. அழற்கதிரி யங்கறவ லங்கிண ரசோகம்
நிழற்கதிர்ம ரத்தகைய தாகநினை கில்லேன்
பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென்
றெழிற்கதிர்வி சும்பிடையி ழிந்திவன் மொழிந்தான்.
உரை
   
அச்சிலாதலம் நிறுவப்பெற்ற வரலாற்றைத் துருமகாந்தன் கூறுதல்
 
443. நிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும்
சிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டா
அலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர்
உலாவிய கழற்றகையி னீரென வுரைத்தான்.
உரை
   
444. என்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின்
நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித்
தன்னிகரி கந்தவ னங்கத னெனும்பேர்ப்
பொன்னவிரு லாநூற்பு ரோகித னுரைத்தான்.
உரை
   
445. மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும்
வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி
மன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னி
இன்னவ னினைப்பகலு ளீண்டிழியு மென்றான்.
உரை
   
446. மடங்கலை யடுந்திற னெடுந்தகைதன் மாறாய்
அடங்கல ரடங்கவடு மாழியஃ தாள்வான்
உடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால்
நடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான்.
உரை
   
447. ஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான்
தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி
ஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன
நீங்கல னிருந்தன னெடுந்தகையி தென்றான்.
உரை
   
உபசார மகளிரை வேந்தன் அனுப்புதல்
 
448. என்றவன் மொழிந்தபி னிருந்தன னிருப்பச்
சென்றவன் வழிச்சிரமந் தீர்மினென நால்வர்
பொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரை
மின்றவழ் விளங்குகொடி வேந்தனும் விடுத்தான்.
உரை
   
மகளிர் வருணனை
 
449. பொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்ப
மின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச்
சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர
அன்னமென வல்லவென வன்னணந டந்தார்.
உரை
   
450. நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ
தலங்கல ளகக்கொடி யயற்சுடர வோடி
விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த
மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண்.
உரை
   
451. அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும்
கலைத்தலை மலைத்துவிரி கின்றகடி யல்குல்
முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பியுள முத்தம்
மலைத்தலை மயிற்கண மருட்டுமவர் சாயல்.
உரை
   
452. கணங்கெழு கலாவமொளி காலுமக லல்குல்
சுணங்கெழு தடத்தொடு முலைச்சுமை யிடத்தாய்
வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்
கிணங்குதுணை யாய்ஞிமிறி ரங்கின வெழுந்தே.
உரை
   
453. முலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும்
நிலைத்தொழில வென்றுள நினைத்தொழுக வின்பக்
கலைத்தொழில்கள் காமனெய்கணைத்தொழில்களெல்லாம்
கொலைத்தொழில வாட்கண னகத்தனகள் கண்டீர்.
உரை
   
454. துடித்ததுவர் வாயொடு துளும்புநகை முத்தம்
பொடித்தவியர் நீரொடு பொலிந்தசுட ரோலை
அடுத்ததில கத்தினொ டணிந்தவள கத்தார்
வடித்தசிறு நோக்கொடு முகத்தொழில் வகுத்தார்.
உரை
   
455. பூவிரி குழற்சிகை மணிப்பறவை போகா
ஆவிகொள் அகிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்.
உரை
   
456. சுரும்பொடு சுழன்றுள குழற்றொகை யெழிற்கை
கரும்பொடு கலந்துள களித்த வவர் தீம்பண்
நரம்பொடு சிவந்துள விரற்றலை யெயிற்றேர்
அரும்பொடு பொலிந்ததுவர் வாயமிழ்த மன்றே.
உரை
   
457. கணங்குழை மடந்தையர் கவின்பிற ழிருங்கண்
அணங்குற விலங்குதொ றகம்புலர வாடி
மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ்
வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும்.
உரை
   
458. நெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார்
மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார்
தொய்யிலிள மென்முலையி னீர்சுடுதி ராயின்
உய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார்.
உரை
   
459. நாம நூற்கலை விச்சையி னன்னெறி யிவைதாம்
தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார்
வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார்
காம நூலினுக் கிலக்கியங் காட்டிய வளத்தார்.
உரை
   
460. இனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார்
பனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார
கனிப வேலிவர் கடல்விளை யமிழ்தனெக் கனிவார்
முனிப வேலிவ ரனங்கனைங் கணையென முனிவார்.
உரை
   
461. புலவி தானுமோர் கலவியை விளைப்பதோர் புலவி
கலவி தானுமோர் புலவியை விளைப்பதோர் கலவி
குலவு வார்சிலை மதனனைங் கணையொடு குலவி
இலவு வாயுடை யிளையவ ருடையன விவையே.
உரை
   
462. மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் டிலாதான்
தன்னை நாமுமோர் தகைமையிற்றணத்துமென் றிருப்பார்
என்னை பாவமிங் கிவர்களைப் படைத்தன னிதுவால்
பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல்கண்ட வகையே.
உரை
   
463. வாம மேகலை முதனின்று வயிற்றிடை வளர்ந்த
சாம லேகைகண் மயிர்நிரை யெனினல மீ்து
காம நீரெரி யகத்தது கனன்றெழ நிமிர்ந்த
தூம லேகைகள் பொடித்தன துணைமுலை யுறவே.
உரை
   
464. சனங்க டாஞ்சில தவங்களைத் தாங்குது மெனப்போய்
வனங்கள் காப்பவ ருளரென முனிவமற் றன்றேல்
தனங்க டாந்தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த
கனங்கொள் வெம்முலை கறுப்பதென் காரணமுரையீர்.
உரை
   
465. தூம மென்புகை துழாவிவண் டிடையிடை துவைக்கும்
தாம வோதியர் தம்முகத் தனபிறர் மனத்த
காம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும்
யாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ.
உரை
   
466. என்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற்
சென்று கற்பக வனமன செறிபொழி லடைந்தார்
இன்று காமுகர் படையினை யிடர்பட நடந்த
வென்றிகாமனுக் குரைத்துமென் றிரைத்தளி விரைந்த.
உரை
   
வேறு
 
467. ஆடைகைத் தலத்தொருத்திகொண்டதங் கடைப்பைதன்
மாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம்
சேடிகைத் தலத்தன செறிமணித் திகழ்வசெங்
கோடிகைத் தலத்தன குளிர்மணிப் பிணையலே.
உரை
   
வேறு
 
468. வண்ணச் சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங்
கண்ணிச் சந்தங்க ணிறைந்தன கரண்டகங் கமழ்பூஞ்
சுண்ணச் சந்தங்க ணிறைந்தன சுடர்மணிப் பிரப்போ
டெண்ணச் சந்தங்கள் படச்சுமந் திளையவரிசைந்தார்.
உரை
   
மருசியின் வியப்பு
 
469. தகளி வெண்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்க
மகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோ
டுகளு மான்பிணை யனையவ ருழைச்செல வொளிர்தார்த்
துகளில் விஞ்சையன் றுணிந்தனன் றுறக்கமீ தனெவே.
உரை
   
மகளிர் செய்த உபசாரம்
 
470. துறக்கம் புக்கவர் பெறுவன விவையென நினையா
வெறிக்கண் விம்மிய விரைவிரி தாரவ னிருப்பச்
சிறைக்க ணோக்கமுஞ் சிறுநகைத் தொழில்களுஞ் சுருக்கி
அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார்.
உரை
   
471. ஆட்டி னார்வெறி கமழ்வன வணிகிளர் நறுநீர்
தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழச்
சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில்
ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான்.
உரை
   
மருசியின் மகிழ்ச்சி
 
472. வயந்த முன்னிய திலகைகல் லியாணி கைவடிவார்
வியந்த சேனைபின் கமலமா லதையென இவர்கள்
இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா
வயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ்ந் திருந்தான்.
உரை
   
வேறு

அரசகுமாரர் இருவரும் சோலைக்குப் புறப்படும் வருணனை
 
473. ஆங்கெழிற்பொ லிந்தவன்னி ருந்தபின்ன லங்குதார்
வீங்கெழிற்பொ லிந்ததானை வேந்தனேவ வீவில்சீர்ப்
பூங்கழற்பொலங்குழைத்தி விட்டவனோடு போர்க்கதம்
தாங்கெழிற்பெ ருங்கையானை சங்கவண்ண னேறினான்.
உரை
   
474. தம்பியோடு சங்கவண்ண னம்பொன்மாலை தாழ்முகப்
பைம்பொ னோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான்
செம்பொன் மாமலைச்சிகைக் கருங்கொண்மூவி னோடெழூஉம்
வம்பவெண்ணி லாவிலங்கு திங்கள்போல மன்னினான்.
உரை
   
பலவகைக் கூட்டங்கள்
 
475. ஆர்த்தபல்லி யக்குழா மதிர்த்தகுஞ்ச ரக்குழாம்
தேர்த்தவீரர் தேர்க்குழாந் திசைத்தபல் சனக்குழாம்
போர்த்தசாம ரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம்
வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம்.
உரை
   
அரசிளங் குமரர் உலாவருவதைக் கண்டு மொய்த்த மாதர் செயல்
 
476. பாடுவார் வணங்குவார் பலாண்டுகூறி வாழ்த்துவார்
ஆடுவாரோ டார்வமாந் தரன்ன ரின்ன ராயபின்
சூடுமாலை சோரவுந்தொ டாரமாலை வீழவும்
மாடவாயின் மேலெலா மடந்தைமார் மயங்கினார்.
உரை
   
477. கொண்டலார்ந்த பொன்னெனிக் குழற்கொடிக் குழாமனார்
மண்டலந் நிறைந்த திங்கள் வட்டமொத்த வாண்முகம்
குண்டலங் கொழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணீஇ
வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய் மறைந்தவே.
உரை
   
478. கூடுதும்பி யூடுதோய் குழற்றொகைத் துணர்துதைந்
தோடுமே லெருத்திடைக் குலைந்த கோதை யோடுலாய்
மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார்
ஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்ன லாவ தாயினார்.
உரை
   
479. தொண்டைவாய் மடந்தை மார்கள் சுடிகைவட்ட வாண்முகம்
கொண்டகோல நீரவாய கோடிமாட மேலெலாம்
வண்டு சூழ்ந்த பங்கய மலர்க்குழா மிணைப்படூஉக்
கெண்டையோடு நின்றலர்ந்த கேழவாய்க்கிளர்ந்தவே.
உரை
   
480. மாலைதாழு மாடவாய் நிலத்தகத்து மங்கைமார்
வேலவாய்நெ டுங்கணார் விலங்கிநின் றிலங்கலால்
சாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடை
நீலமா மலர்க்குழா நிரந்தலர்ந்த நீரவே.
உரை
   
481. சுண்ணமாரி தூவுவார் தொடர்ந்து சேர்ந்து தோழிமார்
வண்ணவார் வளைதயங்கு முன்கைமேல் வணங்குவார்
நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் முன்னரே
கண்ணிதம்மினென் றிரந்துகொண்டுநின்று கண்ணுவார்.
உரை
   
482. பாடுவார் முரன்றபண் மறந்தொர்வாறு பாடியும்
ஆடுவார் மறந்தணிம யங்கியர்மை யாடியும்
சூடுவான் றொடுத்தகோதை சூழ்குழன் மறந்துகண்
நாடுவாய் நிழற்கணிந்து நாணுவாரு மாயினார்.
உரை
   
483. இட்டவில் லிரட்டையு மிரண்டுகெண்டை போல்பவும்
விட்டிலங்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச்
சுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணி சுடர்ந்துநீள்
பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம்.
உரை
   
484. அலத்தகக் குழம்புதம் மடித்தலத்தொர் பாகமா
நிலத்தலத்தொர் பாகமாக நீடுவாயில் கூடுவார்
கலத்தலைத்தொடுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான்
மலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம்.
உரை
   
485. பாடகந் துளங்கவும் பசும்பொனோலை மின்னவும்
சூடகந் துளும்பவுஞ் சுரும்புசூழ்ந்து பாடவும்
ஊடகங் கசிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய்
நாடகங்க ணன்னகர்க்க ணங்கைமார் நவிற்றினார்.
உரை
   
486. மாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும்
சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும்
நீலவா ணெடுங்கணார் நிரந்துநெஞ்சு தாழொரீஇ
ஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார்.
உரை
   
487. வேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப் பொடுள்விராய்த்
தோமறிந்த சூழ்துகின் னெகிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப்
பூமறிந்த தேங்குழன் முடித்தெடுத்து வீழ்த்துலாய்த்
தாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார்.
உரை
   
பரிவாரம் சோலையை அடைதல்
 
488. கொங்குவார் மலர்த்தடத் தமர்ந்தகோதை மாதரோ
டங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மாகுலாய்
மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலையு மனங்களும்
தங்குமார்மி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே.
உரை
   
இயற்கையின் வரவேற்பு
 
489. மானளாய நோக்கினார் மனங்கலந்து பின்செல
வானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலும்
கானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇத்
தேனளாவு வண்டுகொண்டு தென்றல்சென் றெழுந்ததே.
உரை
   
490. செம்முகப் பசும்பொனோடை வெண்மருப்பி ணைக்கரு
வெம்முகத்து வீழ்கடாத்து வேழநின்றிழிந்தபின்
கைம்முகத்து வேலிலங்கு காமர்தாங்கொ லென்றுசென்
றம்முகத்த தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே.
உரை
   
491. தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் மேலளி
கோதுநின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை
மாதுநின்ற மாதவிக் கொடிகடந் தளிர்க்கையால்
போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற் பொலிந்தவே.
உரை
   
492. போதுலாய வேரிமாரி சாரலாய்ப் பொழிந்துதேன்
கோதலா னெரிந்ததாது கால்குடைந்து கொண்டுறீஇ
மாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத்
தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே.
உரை
   
493. போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால்
தாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல்
மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக்
காதலால் வளைப்பபோன்று காவினுட் கலந்தவே.
உரை
   
அரசகுமரர் மருசியை அடைதல்
 
494. புல்லிவண் டமர்ந்துதங்கு பூந்தழைப் பொதும்பிடை
மல்லிகைக் கொடிக்கலந்து மௌவல்சூட வௌவுநீர்
வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி
அல்லிமண்ட பத்தய லசோகமாங்க ணெய்தினார்.
உரை
   
மருசி அரசகுமரரை வணங்குதல்
 
495. பஞ்சிலங்கு மல்குலார் பலாண்டுகூற வாண்டுபோய்
மஞ்சிலங் கசோகநீழன் மன்னவீரர் துன்னலும்
விஞ்சையன் மகிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக்
கஞ்சலித்த டக்கைகூப்பி யார்வமிக் கிறைஞ்சினான்.
உரை
   
மருசி வணங்கிய காரணத்தை விசயன் வினாவுதல்
 
496. ஆங்கவ னிறைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளிப்
பூங்கழற் பொலங்குழைப் பொலிந்திலங்கு தாரினான்
நீங்கருங்கு ணத்தினீவிர் நீடுகுரவ ராதலில்
ஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான்.
உரை
   
மருசி இருவரின் அழகைக் கண்களாற் பருகி மகிழ்தல்
 
497. பானிறக் கதிர்நகை பரந்தசோதி யானையும்
நீனிறக் கருங்கட னிகர்க்குமேனி யானையும்
வானெறிக்கண் வந்தவன் மகிழ்ந்துகண் மலர்ந்துதன்
நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான்.
உரை
   
498. வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள்
நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்கலன்
கால்கள்கொண்டு கண்ணிகாறு முண்மகிழ்ந்து கண்டுகண்
மால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான்.
உரை
   
499. வேரிமாலை விம்மவும் விளங்குபூண்டு ளும்பவுந்
தாரொடார மின்னவுந் தயங்குசோதி கண்கொள
ஆரநோக்கு கல்லல னரசநம்பி மார்களைச்
சாரவாங்கொர் கற்றலத் திருந்துதான் விளம்பினான்.
உரை
   
மருசியின் மறுமொழி
 
500. செம்பொன்வா னகட்டிழிந்து தெய்வயானை யுண்மறைஇ
வம்புநீர் வரைப்பகம் வணக்கவந்த மாண்புடை
நம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றிறைஞ்சுவார்
அம்பொன்மாலை மார்பினீ ரருந்தவஞ்செய் தார்களே.
உரை
   
501. திங்கள்வெண் கதிர்ச்சுடர்த்த திலதவட்ட மென்றிரண்
டிங்கண்மா லுயிர்க்கெலா மெளிய்யவென்று தோன்றலும்
தங்கள்சோதி சாரலாவ வல்ல வன்ன நீரவால்
எங்கண் முன்னை நுங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான்.
உரை
   
`எம் தந்தைபால் செல்வோம்` என்ற மன்னகுமரர்மருசியை வேண்டல்
 
502. இமைகள்விட்ட நோக்கமேற வின்னபோல்வ சொல்லலும்
அமைகமாற்றம் நும்மையெங்க ளடிகள்காண வேகுவாம்
சுமைகொள்மாலை தொடுகளிற்றெருத்தமேறுகென்றனர்
சிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார்.
உரை
   
மூவரும் யானைகளின் மேல் ஏறுதல
 
503. அம்பொன்மாலை கண்கவர்ந்தலர்ந்தசெல்வ வெள்ளமேய்
வெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ்சையாளன் மேல்கொளப்
பைம்பொன்மாலை வார்மதப் பரூஉக்கையீரு வாக்கண்மீச்
செம்பொன்மாலை மார்பர்சேர்ந்து தேவரிற்று ளும்பினார்.
உரை
   
வேறு

மூவரும் போதனமா புரத்தை அடைந்தமை
 
504. கதிர்நகைக் கபாட வாயிற் கதலிகைக் கனக நெற்றி
மதிநக வுரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதிப்
புதுநக ரிழைத்து முத்துப் பொலங்கலத் தொகையும் பூவும்
எதிர்நகைத் துகைத்து மாதரெதிர்கொள நகரஞ் சேர்ந்தார்.
உரை
   
505. விரைக்கதி ரலங்கற் செங்கேழ் விண்ணியங் கொருவ னோடும்
வரைக்கெதிர்ந் திலங்கு மார்பின் மன்னவ குமரச் செல்வர்
எரிக்கதி ரேற்றைக்கால மெழுநிலாப் பருவ மேகம்
நிரைத்தெழு மிருது மன்று நிரந்ததோர் சவியரானார்.
உரை
   
506. வார்கலந் திலங்கு கொம்மை வனமுலை மகளிரிட்ட
வேர்கலந் தெழுந்த தூம வியன்புகை கழுமி நான
நீர்கலந் துகுத்த மாலை நிறமதுத் திவலை சிந்தக்
கார்கலந் திருண்டபோலுங் கண்ணகன் தெருவுட் சென்றார்.
உரை
   
507. தெளிர்முத்த மணலுஞ் செம்பொற் கண்ணமுஞ் சிதர்ந்து தீந்தேன்
தளிர்முத்த மலரும் போதும் சாந்தமு முழுக்கி வண்டார்
ஒளிர்முத்த முறுவலார்த முழைக்கலங் கலந்து மாலைக்
குளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்கடை குறுகச் சென்றார்.
உரை
   
பயாபதி, மருசியை வரவேற்க ஒரு மண்டபம் அடைதல்
 
508. மற்றவ ரடைந்த போழ்தின் வாயிலோ ருணர்த்தக்கேட்டுக்
கொற்றவ னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போல
முற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக்
கற்றைகள் தவழச் சென்றோர் கனக கூடத் திருந்தான்.
உரை
   
அரசன் அவர்களுக்கு இருக்கையளித்தல்
 
509. மன்னவ குமர ரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்
தின்னருள் புரிந்த வேந்த னிறையறிந் தினிதி னெய்திக்
கன்னவில் தோளி னான்றன் கழலடி தொழுது நின்றான்
அன்னவர்க் கிருக்கைத் தான மரசனு மருளிச் செய்தான்.
உரை
   
அரசனது பொலிவு
 
510. வீரியக் குமர ரோடும் விஞ்சையஞ் செல்வனோடும்
காரியக் கிழவர்சூழக் கவின்றுகண் குளிரத் தோன்றி
ஆரியன் னலர்ந்த சோதி யருங்கலப் பீட நெற்றித்
தாரகை யணிந்து தோன்றுஞ் சந்திர சவிய னானான்.
உரை
   
511. அலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கி
உலகுப சார மாற்ற முரைத்தலுக் குரிய கூறி
விலகிய கதிர வாகி விளங்கொளிக் கடகக் கையான்
மலரகங் கழுமமேந்து மனமகிழ்ந் திருந்த போழ்தின்.
உரை
   
மருசி கொணர்ந்த ஓலை
 
512. விஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கி
அஞ்சலித் தடக்கை கூப்பி யரக்கிலச் சினையின் வைத்த
எஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கி்
வஞ்சமில் வயங்குகேள்வி மதிவரன் வாங்கிக் கொண்டான்.
உரை
   
513. நிகரிகந் தழகி தாகி நெரிவடுப் படாத வேழப்
புகர்முகப் பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்துப்போகா
மகரவாய் மணிக்கட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்ட
பகரரும் பதங்கள் நோக்கிப் பயின்றுபின் வாசிக்கின்றான்.
உரை
   
514. போதனத் திறைவன் காண்க விரதநூ புரத்தையாளும்
காதுவேன் மன்ன னோலை கழலவன் றனக்கு நாளும்
ஆதிய வடிசி லொண்கே ழஞ்சன முள்ளிட் டெல்லாம்
தீதுதீர் காப்புப் பெற்றுச் செல்கென விடுத்த தன்றே.
உரை
   
515. அல்லதூஉங் கரும மாவ தலங்குதா ரிவுளித் திண்டேர்
வல்லவ னிளைய நம்பிக் குரியளா வழங்கப்பட்டாள்
மல்லக மார்பி னான்றன் மருமக ளிவளைக் கூவி
வல்லிதிற் கொடுக்க மன்னன் வாழ்கதன் கண்ணிமாதோ.
உரை
   
பயாபதியின் சிந்தனை
 
516. என்றவ னோலை வாசித் திருந்தன னிறைவன் கேட்டு
வென்றியம்பெருமைவிச்சா தரரென்பாரெம்மின் மிக்கார்
இன்றிவன் விடுத்த திவ்வா றென்கொலோ வென்று சிந்தித்
தொன்றுமற் றுரைக்க மாட்டா திருந்தன னுரங்கொ டோளான்.
உரை
   
மருசி சினங்கொண்டு மனிதரின் இயல்பு இத்தகையது என்றல்
 
517. தீட்டருந் திலதக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான்
மீட்டுரை கொடாது சால விம்மலோ டிருப்ப நோக்கி
வாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியாவாறென்
றோட்டருங் கதத்த னாகிக் கேசர னுரைக்கலுற்றான்.
உரை
   
518. முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால்
என்னவ ரேனுமாக விகழ்ந்திடப் படுப போலாம்
அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம்
மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே.
உரை
   
519. பூவிரி யுருவக் கண்ணிப் பொலங்குழை யிலங்குசோதித்
தேவரே யெனினுந் தோன்றச் சில்பகல் செல்பவாயில்
ஏவரே போல நோக்கி யிகழ்ந்துரைத் தெழுவ தன்றே
மாவிரி தானை மன்னா மனிதர தியற்கை யென்றான்.
உரை
   
520. வரைமலி வயங்கு தோளாய்வியாதியான் மயங்கினார்க்குச்
சுரைமலி யமிர்தத் தீம்பால் சுவை தெரிந்துண்ணலாமோ
விரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வந்தானும்
நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகரலாமோ.
உரை
   
521. அறவிய மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப்
பிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்தலாமோ
வெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம்
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்தலாமோ.
உரை
   
522. அருங்கடி கமழுந் தாரை யழிமதக் களிற்றினாற்றல்
மரங்கெடத் தின்று வாழும் களபக்கு மதிக்க லாமோ
இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத்த வர்கட் கென்றும்
வரங்கிடந் தெய்தலாமோ மற்றெமர் பெருமைமன்னா.
உரை
   
523. உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர்
ஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம்
வெள்ளியஞ் சிலம்பி னெங்கோன் விடுத்ததே யேதுவாக
எள்ளியோ ருரையுமீயா திருந்தனை யிறைவவென்றான்.
உரை
   
பயாபதியின் மறுமொழி
 
524. ஆங்கவ னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித்
தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் வேண்டா
ஓங்கிய வோலை மாற்றக் குரியவா றுரைக்க மாட்டா
தீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிரப் பூணான்.
உரை
   
525. வெஞ்சுடர்த் தெறுதீ விச்சா தரரென்பார் மிக்க நீரார்
செஞ்சுடர்த் திலதக் கண்ணித் தேவரே தெரியுங் காலை
மஞ்சுடை மண்ணுள் வாழும் மக்களுக் கவர்க டம்மோ
டெஞ்சிய தொடர்ச்சி யின்ப மெய்துதற் கரிது கண்டாய்.
உரை
   
526. ஈட்டிய வூன்செய் யாக்கை யெம்முழை யின்ன வாறு
வாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்ன னோலை
காட்டிநீ யுரைத்த வெல்லாங் கனவெனக்கருதினல்லான்
மீட்டது மெய்ம்மை யாக வியந்துரை விரிக்கலாமோ.
உரை
   
527. இன்னவ னின்ன நீரா னின்னவே யெய்து கென்று
முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வதல்லால்
பின்னவன் பிறந்து தன்னாற் பெறுதலுக் குரிய வாய
துன்னவ தென்று க்கொன்று துணியுமோ சொல்ல வென்றான்.
உரை
   
528. மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவ முயன்று நோற்றார்க்
கொப்புடைத் துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ மெல்லாம்
எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்தலாகா
தப்படித்தாக நீயுமொழிந்ததே யமையு மென்றான்.
உரை
   
மருசியின் சிந்திப்பு
 
529. இறைவனாங் குரைப்பக் கேட்டே னென்னைபா வம்பொ ருந்தாக்
கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன்
பொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்றுநாணி
அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்தனானான்.
உரை
   
530. கிளர்ந்தொளி துளும்பும் மேனிக் கேசர ரோடு மண்மேல்
வளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க லில்லென்
றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங்
குளர்ந்தன னுணர்வி னூக்கி யுரைக்கிய வெடுத்துக்கூறும்.
உரை
   
மருசியின் கூற்று
 
531. மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னிவாழும்
விஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால்
அஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும்
வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ.
உரை
   
தன் வரலாற்றைக் கூறும் முகத்தால் அரசரின் தொடர்ச்சியைத் தன்னால் கூறுமுடியும் என்று புலப்படுத்தல்
 
532. மண்ணவில் முழுவின் மாநீர்ப் பவபுரமுடைய மன்னன்
பண்ணவில் களிநல் யானைப் பவனவே கற்குத் தேவி
கண்ணவில் வடிவிற் காந்திமதியவள் காதற் பாவை
வண்ணவிற்புருவ வாட்கண் வாயுமா வேகையென்பாள்.
உரை
   
533. மற்றவ ளோடும் வந்தேன் மன்னயான் மருசி யென்பேன்
அற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான்
பெற்றதா யருசி மாலை பெருமக ளருளி னால்யான்
கற்றநூல் பல்ல வாகுங் கருமணிக் கடகக் கையாய்.
உரை
   
534. அலகைசா லாதி காலத் தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம்
உலகநூல் பலவு மோதி யுணர்ந்தன னுரைப்பக் கேண்மோ
விலகிய கதிர வாகி விடுசுடர் வயிரக் கோலத்
திலகம்வீற்றிருந்த கண்ணித் திருமுடிச்செல்வவென்றான்.
உரை
   
நமியின் வரலாறு
 
535. ஆதிநா ளரசர் தங்க ளருங்குல மைந்து மாக்கி
ஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமுந் தொழிலுந் தோற்றித்
தீதுதீர்ந் திருந்த பெம்மான் திருவடி சாரச்சென்று
நீதிநூற் றுலகம் காத்து நிலந்திரு மலர நின்றான்.
உரை
   
536. மூசிநாட் சுரும்பு பாய முருகுடைந் துருக்குஞ் சோலைக்
காசிநாட் டரசன் செங்கோற் கதிர்முடிக் கச்ச னென்பான்
மாசினாற் கடலந் தானை மன்னமற் றவற்குத் தேவி
தூசினாற் றுளும்பு மல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய்.
உரை
   
537. வேய்ந்தக நிழற்றுங்கோதை மிளிர்மணிக் கலாபவட்டம்
போந்தகந்திகழ்ந்து மின்னுப் பூந்துகில் பொலிந்த வல்குல்
ஆய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க
நாந்தகக் கிழவர் கோவே நமியென்பாள் நலத்தின் மிக்கான்.
உரை
   
நமியின் தியானம்
 
538. அங்கவ னரசு வேண்டா னறக்கடல் படைத்த நாதன்
பங்கயங் கமழும் மேனி பவித்திர பரம யோகி
தங்கிய தியானப் போழ்திற் றாழ்ந்துதன் றடக்கைகூப்பிப்
பொங்கிய காதல் கூரப் பாடினன் புலமை மிக்கான்.
உரை
   
வேறு
 
539. அலகிலா ஞானத் தகத்தடங் கநுங்கி
உலகெலாம் நின்னு ளொளித்தாயு நீயே
ஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணாய்
அளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே.
உரை
   
540. அழனாறும் வெங்கதிரோ னாண வலராது
நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே
நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்கட்
சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே.
உரை
   
541. நிறைதரு கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங்
குறைதலி லின்பங் கொடுப்பாயு நீயே
கொடுப்பாயு நீயேயெங் குற்றேவல் வேண்டாய்
விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே.
உரை
   
வேறு
 
542. என்றவன் பாடக் கேட்டே யிறைஞ்சின குறிஞ்சி யேகா
நின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை யெல்லாம்
அன்றுமெய் மறந்து சோர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார்
வென்றவன் றியானத் துள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே.
உரை
   
543. மணநிரைத் திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன்
குணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக்
கணநிரைத் திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ் ஞூறு
பணநிரைத் திலங்கப் புக்கான் பணதர ரரச னன்றே.
உரை
   
ஆதிசேடன் கானத்தைக் கேட்டுப் பரவசமடைதல்
 
544. பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன் மேனி
மின்னவிர் வயிரச் சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான்
தன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம்
மன்னர்கட் கரசன் முன்னை வலங்கொண்டு வணக்கஞ் செய்தான்.
உரை
   
கீதம் கற்பலோகத்தையும் மகிழ்வித்தமை
 
545. தேந்துண ரிலங்கு கண்ணித் தேவனத் தேவர் கோனைத்
தீந்தொடை நரம்பின் றெய்வச் செழுங்குரல் சிலம்ப வேத்தப்
பூந்துணர்க் கற்ப லோகம் புடைபெயர்ந் திட்ட போற்றா
வேந்துடை மான மெல்லாம் வேலினால் விடுத்த வேந்தே.
உரை
   
நமி வரம் பெறுதல்
 
546. மாண்டதன் னிலைமை யுள்ளி வருபொருண் மெய்ம்மை நோக்கித்
தூண்டிய சுடரி னின்ற தியானத்தைத் துளக்கு வாய்போல்
ஈண்டுவந் திசைக்குற் றேவ லெம்மிறை யடிக்கட் செய்தாய்
வேண்டுவ தவென்கொ லென்றான் மிடைமணிப் பூணி னானே.
உரை
   
547. பண்மிசை படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத்
துண்மிசைச் சுடர்பு நோக்கி யுறுபலி யதனைக் கேட்டே
விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ
மண்மிசைப் பெறுவே னாக மற்றிதென் மனத்ததென்றான்.
உரை
   
548. இச்சையங் குரைப்பக் கேட்டே யிமையவ ரியற்கை யெய்தும்
விச்சையுந் துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து வேந்தாய்
நிச்சமும் நிலாக வென்று நிறுவிப்போய் நிலத்தின் கீழ்த்தன்
அச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே.
உரை
   
549. ஆங்கவன் குலத்தி னானெம் மதிபதி யவனோ டொப்பாய்
ஓங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு முடையை நீயும்
ஈங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வந் திசைத்த போழ்தி
னீங்கரு நறுநெய் தீம்பாற் சொரிந்த தோர் நீர்மைத் தென்றான்.
உரை
   
பயாபதியின் குலத்தொடர்ச்சியைப் புரோகிதன் கூறுதல்
 
550. தங்குலத் தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தின்
நுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறே
எங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டு
பொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகலலுற்றான்.
உரை
   
வாகுவலி என்பானது வரலாறு
 
551. யாவனாற் படைக்கப் பட்ட துலகெலாம் யாவன் பாத்த
தேவனால் வணக்கப் பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து
பூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் காண
ஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம்.
உரை
   
552. மற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்பச்
சுற்றிநின் றிலங்குஞ் சோதித் தோள்வலி யென்னும்பேரக்
கொற்றவ னுலகங் காத்த கோன்முறை கொண்டு கண்டாய்
கற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்லாம்.
உரை
   
553. கொடிவரைந் தெழுதப்பட்ட குங்குமக் குவவுத்தோளான்
இடிமுர சதிருந் தானை யிறைத்தொழில் மகனுக் கீந்து
கடிமண மனுக்குந் தெய்வக் கழலடி யரசர் தங்கள்
முடிபொர முனிவிற்றான்போய் முனிவன முன்னினானால்.
உரை
   
554. விண்ணுயர் விளங்கு கோட்டுவிடுசுடர் விளங்க மாட்டாக்
கண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப்
புண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்பநீக்கித்
திண்ணிய தியானச் செந்தீச் செஞ்சுடர் திகழநின்றான்.
உரை
   
555. கழலணிந் திலங்கு பாதங் கலந்தன கருங்கட் புற்றத்
தழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம்
பொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன்
குழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக்கூட்டம்.
உரை
   
556. அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூரக்
கருவடி நெடுங்க ணல்லார் கலந்ததோள் வல்லி புல்ல
மருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத்
திருவுடை யடிக ணின்ற திறமிது தெரியலாமோ.
உரை
   
557. வண்டவாங் குவளைக் கண்ணி மன்னர்தம் மகுட கோடி
விண்டவாம் பிணைய லுக்க விரிமதுத் துவலை மாரி
உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக்
கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய்.
உரை
   
558. அடுக்கிய வனிச்சப் பூவி னமளிமே லரத்தச் செவ்வாய்
வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளைக்கையால் வளைத்த மார்பில்
றொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர்
கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டான்.
உரை
   
559. புல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியுட் கலவிசென்று
மெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு
மல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்த
வல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்னனானான்.
உரை
   
560. ஓவலில் குணங்களென்னு மொளிர்மணிக் கலங்கடாங்கித்
தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக்
கேவலப் பெண்ணென் பாளோர் கிளரொளி மடந்தை தன்னை
ஆவியு னடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான்.
உரை
   
561. எங்கள்கோ னவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர்
தங்கேளார் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார்
அங்கவர் வழிக்கண் டோன்றி யகலிடம் வணங்க நின்ற
இங்கிவன் பெருமை நீயு மறிதியா லேந்தலென்றான்.
உரை
   
562. குடித்தொடர் இரண்டுங் கேட்டே குறுமயிரெறிந்து கண்ணுள்
பொடித்தநீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தன ரிருந்த வேந்தர்
அடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங்
கெடுத்துரை கொடாத முன்னங் கேசர னிதனைச் சொன்னான்.
உரை
   
இருகுலமும் முன்பே தொடர்பு பெற்றது என்று மருசி கூறுதல்
 
563. இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை
அப்படி யரிய செய்த வடிகளெம் மரசனாய
கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென்
றொப்புடைப் புராண நன்னூ லுரைப்பக்கேட் டறிவெ னென்றான்.
உரை
   
பயாபதி மருசியைப் புகழ்தல்
 
564. மன்னவன் மனத்தி னாற்ற மிறைவனை வணங்கி வாழ்த்திப்
பின்னவன் றன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய்
முன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளிட்
டின்னவா றறியு நீரா ரில்லைநின் போல வென்றான்.
உரை
   
565. மந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச்
சுந்தர வயிரத் திண்டோ டோழராச் செவிக ளொற்றா
அந்தர வுணர்வு நூலா வரசெனு முருவு கொண்ட
வெந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார்.
உரை
   
566. ஆதிநூ லமைச்சர்க் கோதுமாண்பெலா மமைந்து நின்றான்
றூதனாச் சொல்லிற் செல்லாச் சூழ்பொரு ளில்லைபோலாம்
ஏதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போழ்திற்
கோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான்.
உரை
   
567. மற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன்
எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச்
சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப்
பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான்.
உரை
   
மணவினைக்கு அச்சன் உடன்படுதல்
 
568. இன்றியா னின்னை முன்வைத் தினிச்சில வுரைக்கல் வேண்டா
ஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்தி நீயே
வென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா
நின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை கண்டாய்.
உரை
   
569. கொற்றவன் குறிப்பி தாயிற் கூவித்தன் னடியன் மாரை
உற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானே
அற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான்
மற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான்.
உரை
   
மருசி விடைபெற்றுக் கொள்ளலும் அரசன் செய்த உபகாரமும்
 
570. தூதன்மற் றதனைக் கேட்டே தொழுதடி வணங்கிச் செங்கோல்
ஏதமில் புகழி னாயா னடிவலங் கொள்வ னென்னப்
போதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்கலாகாச்
சோதிய சுடரச் சேர்த்திப் பெருஞ்சிறப் பருளிச் செய்தான்.
உரை
   
571. அற்றைநா ளங்குத் தாழ்ப்பித் தகனகர்ச் செல்வந் தன்னோ
டுற்றவ னுவப்பக் கூறி யுரிமைநா டகங்கள் காட்டிப்
பிற்றைநாட் குரவர் தம்மைப் பின்சென்று விடுமினென்று
மற்றவர்க் கருளிச் செய்தான் மருசியுந் தொழுது சென்றான்.
உரை
   
வேறு

மருசி இரதனநூபுரத்தையடைதல்
 
572. உலனல னடுதிண்டோ ளூழிவே லோடை யானைச்
சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன்
குலநல மிகுசெய்கைக் கோவொடொப் பார்கள் வாழு
நலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே.
உரை