சேர்ந்தன முழுதுந் தன்நிற மாக்குஞ் செய்கையால் தனக்கினமாகிச், சார்ந்தமா ணிக்க வண்ணர்ஏ கம்பர் தமக்கலால் வணங்கிடா தாகி, வார்ந்தபல் கோளும் நாள்களும் நாளும் வலம்வர இராப்பகல் விளக்கி, நேர்ந்தபே ராசை எட்டையும் பகுத்து நின்றதத் தமனியக் குன்றம். 2 தன்னை அடுத்த பொருளைத் தன் இயல்பாக்கும் அப்பொன்மலை, தன்னைப்போல உயிர்களைச் சீவ இயல்பு போக்கிச் சிவத்தன்மையாக்கும் மாணிக்கவண்ணராகிய திருவேகம்பவாணருக்கன்றி ஏனையோர்க்கு வணங்காமல் ஒளிமிகுந்த சூரியன் முதலிய நவக்கிரகங்களும், நட்சத்திரங்களும் எந்நாளும் வலம் வருதலால் இரவும் பகலும் விளக்க எட்டுப்பெருந் திக்குகளையும் பகுத்துக் காட்டி எல்லையாய் நின்றது. மேருத் தன்மயமாக்குதல்: ‘‘கனக மலையருகே, போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே” (பொன். 100). மேரு வில்லாக வளைந்தமை. சந்திர சூரியர் வலம் வருதல்: “ரவியுமதியமும் உடன் வலம்வருமலை” (தக்க: 43). எண்சீரடி யாசிரிய விருத்தம் நயக்கும் மற்றிதன் ஒளிபரந் திமையோர் நாடு பொன்னிறம் படைத்ததென் றெவரும், வியத்த குங்கிரி மணிபல வரன்றி மீது நின்றிழி முழங்குவெள் ளருவி, வயக்க மாண்டமுப் புரிசையன் றிறுத்த வள்ளல் பூட்டுவிட் டிருத்திய சிலையின், இயக்கம் மேவுபல் பொறியபன் னகநாண் இரைந்து கொண்டொளிர் தொடக்கமே ஒக்கும். 3 விரும்பும் இதன் ஒளி பரத்தலினால் தேவருலகு பொன்னிறம் படைத்ததென்று யாவரும் அதிசயிக்கத்தகும் மேருமலையில் பல மணிகளையும் வாரிக்கொண்டு மேல் நின்றிழியும் வெள்ளிய அருவியின் ஒலிகள் விளக்கத்தால், மாட்சிமைப் பட்ட திரிபுரங்களை அந்நாள் இறுதி செய்து உதவிசெய்த பெருமான் வாசுகியாகிய நாணியைத் தளர்த்தி நிறுத்திய வில்லின்கண் நெட்டுயிர்ப்புக் கொள்ளும் பல புள்ளிகளையும், வரிகளையுமுடைய அப்பாம்பின் மூச்செறிதலை ஒக்கும், இருத்துதல்-நேர்நிற்க நாணியைத் தளர்த்துதல். இளைப்பாறும் நெட்டுயிர்ப்பினை ஒக்கும் அருவி ஒலி. மலைஎ வற்றையுஞ் சிறகரி வலாரி வயங்கெ டப்பொரு தழித்தவன் வணக்குஞ், சிலையி னைப்பறித் தூங்குவைத் தென்னத் திவலை இந்திர திருவிலைக் காட்டும், அலைதி ரைப்புனல் அருவிசூழ் மேரு அம்பொன் மாற்றினில் அதிகமா யதுதான், நிலைபெ றத்தவர் எண்ணிலர் குழீ இச்செய் நிறைத வக்கனல் கதுவலிற் போலும். 4 அலைக்கும் அலையையுடைய நீர் வடிவமாகிய அருவி சூழ்ந்த மேரு மலை எல்லா மலைகளையுஞ் சிறகினை அரிந்த இந்திரனது வெற்றிகெடப் |