சித்தவடம், திருவதிகைக் கருகிலுள்ளது (சுந்தரர்க்கு இறைவன் திருவடி சூட்டிய இடம்). சிவசாதனம் அழகு; ‘சைவ விடங்கின் அணிபுனைந்து’ (திருத்.) (விடங்கு-அழகு). எண்ணிலவாம் யாம்மருவும் இடங்களென உரைத்தருள இறைவி கேளா, அண்ணலே இவற்றுள்ளும் சிறந்ததலம் யாதென்ன அருளிச் செய்வான், புண்ணியமெய்த் திருக்காஞ்சி எவற்றினும்மேம் படுபுரியாம் அவ்வூர் தன்னை, எண்ணினுங்கேட் பினுஞ்சொலினும் வணங்கினும்பே ரின்பவீ டெவர்க்கும் நல்கும். 17 ‘யாம் மேவும் இடங்கள் அளவிலவாகும்’ என உரைத்தருள, இறைவி கேட்டு ‘அண்ணலே, இவற்றுள்ளும் சிறந்த இடம் யாதென்று’ வினவ, அவ்விறைவர் அருளிச் செய்வாராய் அழிவில்லாத சிவபுண்ணியத்திற் கிடனாகிய திருக்காஞ்சி ஏனைய தலங்களினும் மேம்படு நகரமாகும்; அவ்வூரை நினைப்பினும், செவி ஏற்பினும், நாவாற் கூறினும், உடம்பால் பணிந்தாலும் அவர் யாவரே எனினும் அவர்க்குப் பேரின்பத்திற்குக் காரணமாய வீட்டினை நல்கும் அது. தலைவனே, தலையாய தலங்களுட் தலைமைத் தானம் யாதென்று வினாவினர் அம்மையார். அப்பதியின் எஞ்ஞான்றும் மகிழ்கூர்ந்து நின்னொடுநாம் அமர்வேம் அவ்வூர், பற்பலர்சூழ் அவிமுத்தத் தலத்தினும்மேம் பட்டதுவாம் அவிமுத் தத்தின், இப்புவனங் காப்பயாம் விச்சுவநாதப்பெயரான் இலிங்கந் தாபித், தொப்பருஞ்சீர் பெறவைத்தேம் காஞ்சிநக ரிடத்தொருமா மூலந் தன்னில். 18 அக்காஞ்சியின்கண் எப்பொழுதும் யாம் உன்னுடனே வீற்றிருப்போம். அத்தலம் முனிவர் பலரும் சூழ்ந்து போற்றும் காசியினும் மேம்பாடு டையதாகும். காசியில் இப்பூமியைக் காத்தற்பொருட்டு யாமே விசுவநாதப் பெருமான் எனப்பெயர் அமைந்த சிவலிங்க வடிவம் நிறுவி ஒப்பில்லாத சிறப்பினை அச்சிவலிங்கம் பெறும்படி அமைத்தோம்; காஞ்சித் தலத்து ஒற்றை மாமரத்தின் கீழே. தோற்றம்நிலை இறுதிமறைப் பருளென்னும் ஐந்தொழிலும் நடாத்த யாமே, ஏற்றமுடை ஏகம்ப நாதனெனுந் திருப்பெயர்பூண்டிலிங்க மானோம், தேற்றும்இத னாற்காஞ்சி எவற்றினுக்கும் அதிகமெனத் தெளிவாய் அங்கண், போற்றிஒரு நாளேனும் அமர்ந்துறையின் முத்திநிலை புகுத லாமால். 19 படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் நிகழ்த்துதற் பொருட்டு யாமே உயர்வுடைய திருவேகம்பநாதனெனும் திருப்பெயரைத் தாங்கிச் சிவலிங்கம் ஆனோம். தெளிவிக்கும் இக்காரணத்தால் காஞ்சிபுரம் எடுத்தோதிய தலங்கள் |