திருநெறிக்காரைக்காட்டுப்படலம் 149


     பலவாக விரித்துரைப்பது என்னை நெஞ்சானும் பிற தெய்வங்களை
நினையாது விலக்கி அரனையே அன்பொடு துதிசெய்; இதுவே முத்திக்குக்
காரணமா மென்னும் பிருகற்பதியின் வார்த்தையை மனங்கொண்டு சிவி
யென்னும் இந்திரன் வினவுவான்.

     நெஞ்சினும் என்புழி உம்மை, எச்சத்தோடு இழிவு சிறப்பு. பொன்
போலும் உரையென்னும் நயங்கொள்க. அரன்-பாசங்களை அரிப்பவன்.

குரவனே அயன்அரி குரவ னேசிவன்
குரவனே தந்தைதாய் குரவ னேயெலாம்
குரவனே என்று நூல் கூறும் உண்மையைக்
குரவனே என்னிடை இன்று காட்டினாய்          31

     ஆசிரியனே பிரமன், ஆசிரியனே திருமால்; அவனே; தந்தை;
அவனே தாய்; அவனே நண்பன் முதலானோர் யாவரும் என்று நூல் கூறும்
உண்மைப் பொருளை ஆசிரியனே நீ என்னிடத்தில் இன்று உணர்த்தினை.

     இவர்கள் வாயிலாகப் பெறும் நலமெல்லாம் குரவனின் வழிப்பெறும்
நன்மைக்குத் துணை செய்தலின் இங்ஙனம் கூறினார்.

உன்பெருங் கருணையால் உறுதி பெற்றுளேன்
இன்பொடும் எவ்விடத் தெவ்வி திப்படி
பொன்பொதி சடையனைப் போற்று மாறிது
அன்பொடும் அடியனேற் கருளு கென்றலும்.     32

     உனது பேரருளால் உறுதிப் பொருளைப் பெற்று உளன் ஆயினேன;்
மகிழ்ச்சி யொடும் எத்தலத்தில் எம்முறைப்படி பொன்போலும் நிறங்கொண்ட
பொதிந்த சடையையுடைய பெருமானை வழிபடு முறையை அன்போடும்
அடியேற் கருளுக என்று சிவி கூற.

கடலுடை வரைப்பினிற் காஞ்சி மாநகர்
இடனுடைக் குணக்கினில் எய்தி னாரெலாம்
விடலருஞ் சத்திய விரத தானத்தின்
முடிவில்சத் தியவிர தேசன் முன்பரோ.         33

     கடலை ஆடையாகவுடைய நிலவுலகிற் காஞ்சி மாநகரில் இடம் விரிந்த
கிழக்கெல்லையில் சார்ந்தோர் யாவரும் நீங்குவதற்கரிய சத்திய விரதீசர்
திருமுன்னர்,

     ‘‘மேவினார் பிரியமாட்டா விமலனார்‘‘ (திருத். கண்ண-34).

மேற்றிசைச் சத்திய விரத தீர்த்தம்ஒன்
றாற்றவும் மேன்மைபெற் றுடைய தாயிடைப்
போற்றுறும் பசுபதி விரதம் பூண்டுசென்
றூற்றெழுந் துறுதடத் துதகம் ஆடியே.         34