நாரணனைப் படைக்க நான்முகன் வேண்டல் அதுமனத் தெண்ணினான் அழுக்கறுத் திளநிலா விதுமுடிப் பிரான்திருக் கயிலையின் மேயினான் பொதுவறத் தொழுதனன் போற்றிநின் றுரைசெய்வான் மதுமலர்ப் பொகுட்டணி மாளிகைப் பண்ணவன். 3 | தன்னைத் திருமால் சிருட்டித்தலை நினைந்து பொறாமை கொண்டு திருக்கைலை மலையை அடைந்து இளநிலவுடைய பிறையைச் சடையிற் சூடிய பெருமானைச் சிறப்புற வணங்கித் துதித்து நின்று தேனையுடைய தாமரைமலர்ப் பொருட்டில் வீற்றிருக்கும் பிரமன் கூறுவான். யாவும் படைக்கும் தன்னையும் படைக்கும் பெருஞ்செல்வம் திருமாலுக்குள்ளது குறித்து அழுக்காறு கொண்டனன். பெருமநின் இடப்புறத் தரிதனைப் பெற்றனை அருளொடும் வலப்புறத் தென்னைஈன் றளித்தனை உருவவை குந்தமுஞ் சத்திய உலகமும் இருவரும் பெற்றுளேம் எந்தைநின் னருளினால். 4 | பெருமானே, உனது இடப்பாகத்தில் திருமாலைப் பெற்றனை; வலப்பக்கத்தில் கருணையொடும் அடியேனை ஈன்றருள் செய்தனை. இருவர்க்கும் முறையே அழகிய வைகுந்த வாழ்வும், சத்திய உலக வாழ்வும் நீவிர் அருள் செய்ய இருவேமும் பெற்றுளேம். படைப்பதுங் காப்பதும் பணிஎமக் காக்கினை தொடைப்பொலங் கொன்றையந் துணர்துறுஞ் சடைமுடி விடைக்கொடிப் பகவனே விருப்பொடு வெறுப்பினை உடைத்தநின் னருட்கிரு வேங்களும் ஒத்துளேம். 5 | படைப்பதும், காப்பதுமாகிய இரு செயல்களையும் இருவேமாகிய எம்மிடத்தில் அருளொடும் வைத்தனை. பொன் மயமாகிய கொன்றை மலர்க் கொத்துகள் செறியும் மாலையையும் சடை முடியையும், விடை எழுதிய கொடியினையுமுடைய பகவனே! விருப்பு வெறுப்பற்ற சமநோக்கில் விளங்கும் நின் திருவருளுக்கு யாங்கள் இருவரும் ஒப்பாவேம். பத்திசெய் துன்னருள் பெற்றுவெம் பாம்பணை உத்தமன் என்னைஇவ் வுலகொடும் ஈன்றனன் அத்திறத் தியானும்அம் மாயனோ டகிலமுஞ் சித்தனே படைக்குமா திருவுளஞ் செய்குவாய். 6 | பேரன்பு வைத்து, உன் திருவருளைப்பெற்று ஆதிசேடனைப் பாயலாகக் கொண்ட புருடோத்தமன் அடியேனையும் இவ்வுலகையும் ஒருங்கு படைத்தனன். அவ்வாற்றால் யானும் அம்மாயனையும் அகில உலகங்களையும் படைக்கும் திறம் மெய்யறிவினனே திருவுள்ளத் தெண்ணுக. |