சிவாத்தானப் படலம் 185


     கெடாத வேள்வியில் தரப்பெறும் அவிப்பாகம் நுகர வரும் சந்திர
சூரியரை வழியிடையே எதிர்வரக் கண்ட அளவிலே எழுந்த கோபத்தால்
கைப்பற்றி உடன் கொண்டு வருவது ஒப்ப இருவகை நிறமுடைய
வெண்டாமரை செந்தாமரை இவற்றின் மணம் பொருந்திய மலர்களைப் பல
கொண்டு விரைவது, சுரநதி.

அயனிடை உறும்வெகு ளியின்அணை பொழுதிணை விழியவைசேந்
தியல்வது பொரஎரி மருள்குவ ளைகள்இடை இடைஒளிர
வெயரென உறைசித றிடமுலை மிடைஅணி துகில்குழறித்
துயல்வரல் பொரவரை யொடுதிரை தொகவரு வதுநதியே.     19

     பிரமனிடத்து மிகும் வெகுளியொடு அணைகின்ற பொழுதில்
இருவிழிகளும் சிவந்து தோன்றுவ போல நெருப்பினை ஒத்த செஞ்கழுநீர்ப்
பூக்களும் இடை இடையே மிளிரவும், வியர்வை என நீர்த்திவலைகள்
சிதறிடவும், கொங்கைமேற் றுகில் குலைந்து அசைதலை ஒப்ப மலைகளும்
திரைகளும் கலந்து மேலெழலும் விலகலும் ஆக வருவது, அந்நதியே.

     வெகுளியொடு விரைவின் நிகழ்வன: கண் சிவத்தலும், வெயர்வை
பொங்கலும், ஆடை குலைதலும் ஆவன.

அவிஉண நிறைசுரர் பலரையு மலைசெய எழுசெயல்போற்
கவிழ்தலை யனகுவ டுகளொடு வெதிர்களி னொடுகடுகிப்
புவிமுதல் அறவரு பிரளய நிலையுணர் புரையவருஞ்
செவியொடு விழிவெரு வரவரு திறலது குலநதியே.       20

     அவிப்பாகம் பெற நிறைந்த தேவர் யாவரையும் வருத்த வருகின்ற
செய்கைபோல மலைச்சிகரங் கீழ்ப்பட அடிமலை நீர்மேற் பொருந்தவும்,
மூங்கில்களும் தலைகீழாகவும் புரட்டி விரைந்து பூமி முற்றவும் கெடும்படி
வரும் பிரளய நிலையைக் கண்டுணர்ந்த மேலோரும் காதொடு கண்களும்
ஓசையைக் கேட்டும் நிகழ்ச்சிகளைக் கண்டும் அஞ்ச வருவலிமையையுடையது,
சுரநதி.

     ‘‘மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும், விண்பால்
திசைகெட் டிருசுடர் வீழினும்’’ அஞ்சாத நெஞ்சினரும் அஞ்ச வந்தது
சுரநதி. வேள்வியை உடன்படும் தேவரும் கலைமகளுக்குப் பகைவராகலின்
இங்ஙனம் கூறினார்.

அள்ளவி நிறைகள முழுவதும் அழிவுசெய் தபின்அதனின்
உள்ளுற நடவென மிகுசின மொடுகற கறவழிபாற்
கள்ளிகள் பலபல கொடுவிடு கணைநுதி நிகர்அயில்வாய்
முள்ளுடை முதல்பல பலகொடு முடுகுவ துயர்நதியே.      21

     உயர்ந்த அந்நதி செறிந்த அவிசுகள் நிறைந்த யாகசாலையைச் சார்ந்த
இடங்களும் முழுவதும் அழித்த பின்னே அவ்விடத்தில் நடவாக (நாற்று)
நடுதற்கென்று பெருங்கோபங்கொண்டு கறகற என்னும் ஒலியுடன் வழிகின்ற
பாலையுடைய கள்ளிகள் பலப்பல