188காஞ்சிப் புராணம்


பின்னும் அங்கவன் விடாதுபிணை கச்சி நகரந்
தன்னி டைக்குலை யெனக்கிடை கொளத்த வளமான்
முன்னர் நோக்கிமுடி சாய்த்துநனி நாணம்முதிர
அன்ன தென்திசையில் நீளிடை அகன்று விலகி.     29

     மேலும் அத்திருமால் விடாமல் அந்நதிசேர்கின்ற காஞ்சியில்
கரைபோலக் கண்வளரப் படுத்துக் கிடத்தல் வெண்ணிறமுடைய சரசுவதி
முன்னே பார்த்து மிகப்பெரிய நாணத்தால் தலையைச் சாய்த்து அந்தத்
தென்திசையினின்றும் நீண்ட தொலைவில் மிக விலகி,

     அன்ன-அந்த என்னும் சுட்டுப் பொருளில் முன்னும் வந்தது;

வேள்வி செய்கள மதன்குண திசைக்கண் விரவி
ஆழி யிற்செல நடந்தனள் அயன்றன் மனைவி
தாழ்வு தீர்ந்தயன் உகந்தனன் மகிழ்ந்து தலைவன்
சூழ்க ணங்களொடு மாயனெதிர் தோன்றி அருள்வான்.   30

     பிரமனுக்கு வாழ்க்கைத் துணைவியாகிய சரசுவதி யாகஞ் செய்கின்ற
இடத்திற்குக் கிழக்குப் பக்கத்திற் பரவிக் கடலை நோக்கி விரைந்தனள்.
பிரமன் தாழ்வு நீங்கி உயர்ந்தனன். சிவபிரான் திருவுளமுவந்து
சூழுஞ்சிவகணங்களொடும் திருமாலின் எதிர் தோன்றி அருள் செய்வான்.

     மாயன்-கரிய நிறமுடையோன் (பரி.3.2) உகப்பே உயர்வு (தொல்.சொ.)
தலைவன்-யாகபதி.

மாலும் நதியும் வண்பெயர் பெறுதல்

அறுசீரடி யாசிரிய  விருத்தம்

சொன்ன வண்ணஞ் செய்தநீ சொன்ன வண்ணஞ் செய்தவன்
என்ன என்றும் ஓங்குதி இத்தி ருப்பெ ருநதி
மன்னு வல்வி னையெலாம் வாட்டு வேக வதியென
இந்நி லத்தி னிற்சிறந் தின்ப வாழ்வ ளிக்கவே.         31

     சொன்ன வண்ணம் செய்தமையால் நீ சொன்ன வண்ணஞ் செய்த
பெருமாள் என்று எந்நாளும் உயர்க. இந்தத் தெய்வத் தன்மையுடைய
பெருநதி மிகும் வலிய வினை எவற்றையும் அழிக்கும் வேகவதி நதியென
இந்நிலத்தினில் ஏற்றமுற்றுத் தன்கண் மூழ்குவோர்க்கு இன்ப வாழ்வினை
அருள் செய்க.

     சொன்ன வண்ணம் செய்த பெருமாள் எனினும் யதோக்தகாரிப்
பெருமாள் எனினும் ஒக்கும்.

இரவி ருட்கண் இந்நதி இப்ப திக்கண் எய்திடும்
வரவு காண நீஒரு வாள்வி ளக்கொ ளியென
விரவி னாய்வி ளக்கொளி விண்டு வென்ன மேவுகென்
றருளி எந்தை இம்முறை வேள்வி காத்த ளித்தபின்.    32