திருநாட்டுப்படலம் 19


சுவடிகளையும், குடைவேலையும் விதைத்து,

     ‘மண்னின்’ என்ற குறிப்பானே கழுதை ஏரானுழுது வித்தியது
விளங்கிற்று. ‘‘வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டு, வெள்ளை வரகும்
கொள்ளும் வித்தும்’’ (புறநா-392)

வெற்றிபுனை மாலிகை மிலைச்சிஇரு பாலுஞ்
சுற்றிவரு புட்குல நிரைத்தொழுதி தன்னால்
கொற்றமிகும் ஆர்கலியை நோக்கிஅறை கூவி
எற்றுகழி நெய்தல்வழி எய்துறுத லோடும்.       29

     வாகை மாலையைச் சூடி வலமும், இடனும், வட்டமும் தொடரும்
பறவைக் கூட்டத்தின் பேரொலியால், வெற்றி மிகும் கடலை நோக்கி வலிதிற்
போர்க்கு அழைத்துக், கரையை மோதுகின்ற உப்பங்கழிவழி அடைந்த
அளவிலே,

     தொழுதி-பறவைக் கூட்டத்தின் ஒலி. ஆர்கலி-கடல்; நிறைந்த
ஒலியுடையது. ‘‘அறை கூவி ஆட்கொண்டருளி” (திருவா)

பௌவம துணர்ந்துபவ ளந்தரள மாதி
வௌவுதிரை ஏந்தியெதிர் கொண்டடி வணங்கச்
செவ்விதின் உவந்துபயம் ஈந்துசின மாறிக்
கௌவியமெய் யன்பொடு கலந்துளதை யன்றே.     30

     பாலி மன்னன் படை எடுப்பை அறிந்து, கடல் பவளம், முத்து முதலிய
பொருள்களைத், தாவிப்படர்கின்ற திரைக்கரங்களால் ஏந்தி, எதிர்கொண்டு
அடிதாழக் கோபம் தணிந்து செவ்வனே மகிழ்ந்து பயம் ஈந்து மேலிட்ட
உள்ளன்பொடும் அளவளாவியது, பயம்-பயன், நீர்.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

தன்னடிப் படுத்து மேலைத் தண்டக நாடு முற்றும்
முன்னுறக் கவர்ந்து கொண்ட வளத்தினும் மூவி ரட்டி
பின்னுற அளித்து வானிற் புலவரும் பெட்கு மாற்றால்
அந்நிலை உயிர்கள் ஓம்பி அரசுசெய் துறையும் பாலி.    31

     தண்டக நாட்டினைத் தனக்குக் கீழ்ப்படுத்தி, முன் தான் கொள்ளை
கொண்ட வளத்தினும் மிகுதியாகப் பின்னர் அளித்துத் தேவரும் விரும்பும்
போகம் உடைத்தாம் அந்நிலையில் பாலி அரசு வீற்றிருக்கும்.

     ‘ஒருவர் கூறை எழுவர் உடுத்து’ என்றாற் போல ‘மூவிரட்டி’ மிகுதி
குறித்தது.

காரணப் பொருளின் தன்மை காரியத் துளதாம் என்ன
ஆரணப் பனுவல் கூறும் அரும்பொருள் தெளியத்தேற்றும்
பேரிசைப் புவிமேல் யார்க்கும் பெட்டன பெட்ட வாறே
சீரிதிற் கொடுக்குந் தேனுத் தரவருஞ் செழுநீர்ப் பாலி.   32