கையால் இருத்திய பின் குரங்கேறாகிய வாலியும் மலையை இடமும் வலமுமாகப் பல பக்கங்களிலும் திருப்பி விரையச் சுழல்வித்துத் தெளிந்த திரையையுடைய கடலரற்றி நீரை மறித்து வீசி விரித்துப் பரவித் துள்ளிப் பொங்கி யெழுந்தாட வருத்திக் கலக்கிச் சுழல் வல்லென வாங்கிக் கடைந்திடு பொழுதில், வெரூஉவர விடமெழல் ஆற்றரி தாகி இளைப்புற் றரவிறை வாயின் நுரைகள் காற்றி உயிர்ப்பு விடலுங் கடுஞ்சுடு நீர்க்கட லெங்கும் தோற்று நுரைகள் பரம்பித் தொக்க கலப்பிடை நின்றும் கூற்றுறழ் ஆலால மென்னுங் கொடுவிடந் தோன்றிய தன்றே. 17 | வாசுகி பொறுக்க இயலாததாகி இளைத்து வாயினின்று நுரைகளைக் கக்கிப் பெருமூச்செறிய மிகவும் சுடுகின்ற நீர்மயமாகிய கடலில் எவ்விடத்துந் தோன்றிய அந்நுரைகள் பரவிக் கூடிய கலப்பில் நின்றும் இயமனை ஒத்த ஆலாலம் என்னும் கொடிய விடம் தோன்றியது. அளக்கர் முழுதும் வறப்ப அண்ட கடாகம் அழற்றத் துளக்கில் உயிர்த்தொகை முற்றுஞ் சுட்டெழும் வல்விடத்தீயின் கிளக்கரு வெம்மை கதுவிக் கேழுடல் வாடி வெதும்பி விளக்க முறும்புகழ் வாலி வெரீயினன் ஓட்ட மெடுத்தான். 18 | கடல் முழுதும் வற்றவும், அண்டத்துச்சியும் தீய்ந்து ஒழியவும், நடுக்கமில்லாத உயிர் வருக்கங்களையும் நடுக்குறச் சுட்டும் எழும் கொடிய விடமாகிய நெருப்பின் சொல்லற்கரிய வெப்பம் தாக்கி நன்னிறமேனி வாடி வெதும்பி வென்றியால் விளக்கம் மிகும் புகழினையுடைய வாலியும் அஞ்சினனாய் ஓட்டம் எடுத்தான் (கம்பி நீட்டினான்). வருகனல் வல்விடந் தாக்கி மாயவன் வெண்ணிற மேனி கருகினன் அன்றுதொ டங்கிக் கரிய னெனப்பெயர் பெற்றான் திருமல ரோன்உடற் பொன்மை தீர்ந்து புகைநிறம் உற்றான் வெருவு திசைச்கிறை யோரும் வேற்றுரு வெய்தி அழுதார். 19 | கடலினின்றும் வருதீயை யொத்த கொடிய விடம் மோதினமையால் திருமாலின் வெண்ணிறமேனி கருகினன். ஆதலின் அன்று முதல் கரியனென்னும் பெயரைப் பெற்றனன். பிரமன் தன் திருமேனிப் பொன்னிறம் தவிர்ந்து புகை நிறம் எய்தினான். யாவரும் அஞ்சும் ஆற்றலுடைய எண்திசைத் தலைவரும் (இந்திரன் முதலானோரும்) வேறு வடிவினராகி அழுதனர். திருமால் வெண்ணிறம் உடைமை: ‘கடல் கடைந்திடச் செல்லுறூஉம் வெள்ளைமால்’ (பக்கம் 11-இல்) காண்க. |