கடவுளர்யாரும் கைலையை யடைதல் யாரும் பதைபதைத் தோட்ட மெடுத்தினிச் செய்வதென் னென்று சார்பு பிறிதொன்றுங் காணார் தாளொடு தாள்கள் இடற நாரண னேமுதல் வானோர் நண்ணினர்க் கின்ப மளிக்குஞ் சீர்கெழு வெள்ளிக் கயிலைத் திருமலை நோக்கி நடந்தார். 20 | யாவரும் துடிதுடித்து விரைந்தோடி இப்பொழுது செய்வதென்னை என்று பற்றுக்கோடு வேறொன்றுங் காணாராய் நாரணன் முதலான தேவர் நண்ணினர்க்கு இன்பமளிக்குஞ் சிறப்புக்கெழுமிய வெள்ளி மலை எனவும் திருக்கயிலை எனவும் பேசப்பெறும் திருமலையை நோக்கிக் காலொடு கால் தடுத்துத் தள்ளாட நடந்தனர். சார்ந்தவர்க்கு இன்பன்: ‘சார்ந்தார்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்’ (திருஞா. திருவல்லம்) வெங்கதிர் தாக்க உடைந்தோர் மென்னிழல் சேர்ந்தெனச் சென்று மங்கல வெற்பினை எய்தி வஞ்ச விடத்துயர் நீங்கி அங்கண் வரையை வணங்கி அருளொடும் ஏறி இளங்கால் தங்கிய போக புரமுன் சற்றிளைப் பாறி இருந்தார். 21 | சூரிய கிரணம் தாக்குதலால் மெலிந்தோர் மெல்லிய நிழலைச் சேர்ந்தாலென மங்கலமாகிய திருமலையைச் சென்றடைந்து கொடிய விடத்தினது துயரம் தவிர்ந்து அவ்விடத்து மலையை வணங்கி அன்போடும் ஏறித் தென்றற் காற்றுத் தவழ்கின்ற போக புரத்தின் முன்பு சிறிது இளைப் பாறி யிருந்தனர். மேற்படி வேறு படைத்தபெருந் துயர்நீங்கி நாற்றிசையுங் கண்விடுத்துப் பார்ப்போர், அங்கண், விடைக்கொடியோன் திருக்கயிலை விரிசுடர்வெண் கதிர்நீட்டும் விளக்கந் தன்பால், அடைக்கலமென் றுறுந்தம்மைத் தொடர்ந்துவருங் கொடுவிடம் அங் கணைவு றாமைப், புடைத்துந்தித் தள்ளுவான் நீட்டுதடங் கைகளெனப் பொலிவ கண்டார். 22 தாங்களே தோற்றுவித்துக் கொண்ட பெரியதுன்பத்தினின்றும் நீங்கி நாற்றிசையும் சுற்றிப் பார்ப்போராகிய திருமாலாதி தேவர்கள் அவ்விடத்தில் இடபக்கொடியை யுடையவனது திருக்கயிலை விரிந்த சுடர்விடு வெள்ளிய கதிர்கள் நீட்டுதலான் ஆகும் விளக்கம் தன்னிடத்து அடைக்கலம் என்று வந்துறும் தங்களைத் தொடர்ந்து துரத்தி வருங்கொடிய விடம் அங்கே வந்து வருந்தாதபடி அடித்துப் பிடர் பிடித்துத் தள்ள நீட்டுகின்ற நீண்ட கைகளை ஒப்பப் பொலிவன எனக் கண்டனர். கடல்அகடு கிழித்தெழுந்த விடவேகம் ஆற்றாது கழிய நொந்தார், இடர்பெரியர் அளித்தக்கார் அந்தோஎன் றிரங்கினபோல் இலகும் வெள்ளித், தடவரைமேல் தூங்கருவி பனித்திவலை நீர்தங்கள் முகத்து வீசப், படரும்நெடுந் தடங்கொடிகள் சாந்தாற்றித் தொழில் செய்யும் பான்மை கண்டார். 23 |