உய்ந்தனம்உய்ந் தனம்என்றே உம்பர்களுந் தானவரும் முந்திமணி வாய்தலிடை முடிநெருங்க நுழைந்தேகி எந்தைபிரான் வீற்றிருக்கும் ஓலக்கம் எதிர்நோக்கிப் புந்திநிறை களிகூரத் தொழுதெழுந்து போற்றினார். 38 | ‘உய்ந்தேம்! உய்ந்தேம்!!’ என்றே தேவர்களும் அசுரர்களும் ஒருவரை ஒருவர் முந்தி மணிகள் பதிக்கப்பெற்ற வாயிலில் முடியொடு முடிமோத நுழைந்து போய் எமது பெருமான் வீற்றிருக்கும் பேரவைக் காட்சியை எதிர்கண்டு உள்ளம் நிறைந்த களிப்பெய்தத் தொழுதெழுந்து துதி செய்தார். பிரமன் முறைப்பாடு அங்கவரை எதிர்நோக்கி நகைத்தருள்கூர்ந் தருள்வாரி பங்கயத்தோய் உருமாறி முகஞ்சாம்பி மெய்பனிப்ப இங்கிவர்குட் குற்றதெவன் என்றருள மறைப்புத்தேள் செங்கையிணை முகிழ்த்திறைஞ்சி விண்ணப்பஞ் செய்கின்றான். 39 | அப்பொழு தத் தேவரை எதிர் நோக்கிப் புன்சிரிப்புடன் அருள் மிகுந்து அருட்கடலாகிய பிரான் ‘தாமரை மலரோனே! நிறமாறி முகஞ் சோர்ந்து மெய்நடுக்கமுறும்படி இவர்களுக்குற்ற இடையூறு யா’தென்று வினவியருளப், பிரமன் செவ்விய கரங்களைக் கூப்பி வணங்கி முறையிடுகின்றான். ஐயனே அடியேங்கள் அறியாமைத் தொடக்குண்ட கையரேம் ஆதலின்உன் கண்ணருள்பெற் றெய்தாது வெய்யநறுஞ் சுவைஅமிழ்தம் பெறற்பொருட்டு வெவ்வினையேம் பையரவான் மந்தரத்தாற் பாற்கடலைக் கடைந்தேமால். 40 | தலைவனே! அடிமைகளாகிய யாங்கள் அறியாமையின் வயப்பட்ட சிறுமையை உடையேம், ஆதலின், நினது திருக்கடைக்கண்ணருளைப் பெற்றுப் புகாது விரும்பத்தக்க நறிய சுவையினை யுடைய அமிழ்தத்தைப் பெறும் பொருட்டாகத் தீவினையினேம் வாசுகியையும், மந்தரத்தையும் துணையாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தேம். அடிமைகள் தலைவன் வழிநின்று செயல் புரியாமைக்குக் காரணம் கூறுவார் சிறுமையேம், வெவ்வினையேம் என்றனர். துன்றியதீஞ் சுவைஅமிழ்தந் தோன்றாது விடந்தோன்றி இன்றுசரா சரம்அனைத்தும் எரிசெய்து நீறாக்கிற் றன்றினர்ஊர் எரித்தாய்உன் அருளன்றி முயல்வதெலாம் ஒன்றொழிய ஒன்றாம்என் றுரைக்கும்மொழி மெய்யாமே. 41 | பகைவர் தம்முடைய முப்புரங்களை எரித்தோனே! செறிந்த இனிய சுவையுடைய அமிழ்தம் தோன்றாமல் அதற்கு மாறாக விடந் |