208காஞ்சிப் புராணம்


தோன்றி இன்று இயங்கியற்பொருள், நிலையியற் பொருள், அனைத்தினையும்
எரித்துப் பொடி படுத்திற்று. உன் அருளொடு மாறுபட்டு முயல்வன யாவும்
ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும் என்று கூறும் மறைமொழி
மெய்யே ஆகும்.

     அன்றுதல் - மாறுபடுதல். ‘‘அன்றினார் புரம் எரித்தார்க்கு’’ (திருத்.
பூச: 1.) முயலுதல்-முனைப்போடு செய்தல். இன்று - ஊழியல்லாத இந்நாள்.

இற்றொழிந்தோர் ஒழியவே றெஞ்சியயாம் சிலர்வந்திங்
குற்றனம்வண் ணமும்மாறி உயங்கினேம் நீயலதோர்
பற்றிலேம் இவ்வளவில் உலகமெலாம் பாழாகும்
சற்றும்இனித் தாழாது தண்ணளிசெய் திரங்காயால்.    42

     ‘‘இறந்தொழிந்தோர் கழிய வேறாக மிகுந்த சில்லேமாகிய யாம் இங்கு
வந்து சேர்ந்தனம்; நிறமும் மாறி வாடினோம்; நீ யன்றி வேறோர் களை கண்
இல்லோம்; இவ்வளவில் உலக முற்றும் பாழ்படும். இனிச் சிறிதும் காலம்
நீட்டியாது தண்ணிய கருணை செய்து இரங்கி அருளுக.

இதுபொழுது காத்திலையேல் எமக்கிறுதி இன்றேஆம்
விதுமுடித்த பெருங்கருணை வெள்ளமே என்றிரந்தான்
மதுமலர்த்தார் விண்ணவரும் மனங்கலங்கி முறையிட்டார்
அதுவுணர்ந்தெம் பெருமானும் அஞ்சலீர் என்றருளி.    43

     ‘இன்னே காவாயெனின் எமக்கு வாழ்நாள் முடியும்காலம் இன்றே
ஆகும். இளம்பிறையை அணிந்துவாழ்வித்த பெருங்கருணைப் பெருக்கே!’
என்று யாசித்தான். தேன் பொருந்திய கற்பகமலர்மாலையைத் தரித்த
தேவரும் மனமயங்கி முறையிட்டனர். அதனைத் திருவுளங் கொண்டு
எம்முடைய பெருமானும் ‘நீவிர் அஞ்சன்மின்’ என்றருள் செய்து.

இறைவன் விடமுண்டருளுதல்

கலி நிலைத்துறை

இருந்த வாறுளத் தெண்ணினான் மலர்க்கரம் நீட்டக்
கருந்த ழற்கடு கமலமீச் சிறைஅளி கடுப்பப்
பெருந்தி ருக்கரத் தெய்திஏர் செய்துபே ராளன்
திருந்து பார்வையிற் சிற்றுரு வாய்அடங் கியதால்.    44

     யாவருங் காண இருந்த அந்நிலையே திருவுளம் பற்றித் தாமரை
மலரை ஒக்கும் கரத்தை நீட்டவும் கரியதும் நெருப்புப் போல்வதும்
ஆகிய விடம் தாமரை மலர்மேல் சிறகுகளையுடைய வண்டினை ஒப்பப்
பெருமையமைந்த திருக்கரத்தில் எய்தி அழகு காட்டிப் பெருவீரன் செவ்விய
திருநோக்கில் சிறிய வடிவாய் அடங்கியது.